எடியூரப்பா ஆதரவாளர்கள் கூண்டோடு ராஜினாமா?
மண்டியா: கர்நாடக முன்னாள் முதல் வர் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் வரும் நாட்களில் ஒருவர் பின் ஒருவராக ராஜினாமா செய்வார்கள் என்றும், தேவைப்பட்டால் கூண்டோடு ராஜினாமா செய்யவும் தயங்க மாட்டார்கள் எனவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார். நிலக்கரி சுரங்க முறைகேட்டில் சிக்கி முதல்வர் பதவி இழந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கடந்த மாதம் 30ம் தேதி பாஜவில் இருந்து விலகினார். எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். கடந்த 9ம் தேதி ஹாவேரியில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கர்நாடக ஜனதா கட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அடுத்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு கர்நாடக ஜனதாவை ஆட்சிக்கட்டிலில் அமரச் செய்வேன் என உறுதிமொழி எடுத்துள்ளார். எடியூரப்பாவின் புதிய கட்சி துவக்க விழாவில் பாஜவை சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறி கலந்து கொண்டனர். இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜ அறிவித்தது. ஆனால் அப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. மேலிட உத்தரவுக்காக காத்திருப்பதாக மாநில பாஜ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், மண்டியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் எடியூரப்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘வரும் நாட்களில் தனது ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக ராஜினாமா செய்வார்கள். தேவைப்பட்டால் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யவும் தயங்க மாட்டார்கள்’ என்றார். அந்த சூழ்நிலையில் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். திப்பு சுல்தான் சமாதியில் அஞ்சலி செலுத்தியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ‘மதசார்பற்ற கொள்கைகள் அடிப்படையில் எனது கட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. அனைத்து சமூகத்தினரின் ஆதரவையும் பெற முயற்சி எடுக்கப்படும்’ என்றார்.