பக்தர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை : புதிய எஸ்.பி. பேட்டி
திருமலை: திருப்பதி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த பிரபாகர்ராவ், கிருஷ்ணா மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ஐதராபாத்தில் புலனாய்வுத்துறை எஸ்.பி.யாக இருந்த ராஜசேகரபாபு திருப்பதி எஸ்.பி.யாக மாற்றப்பட்டார். பொறுப்பு ஏற்ற ராஜசேகரபாபு ஏழுமலையான் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வந்த எஸ்.பி. நிருபர்களிடம் கூறுகையில், திருமலைக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்குவது முதல் கடமை. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரம். இந்த மாவட்டத்துக்கு புதிதாக வந்துள்ளதால் ஒவ்வொன்றாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது திருமலை ஏ.டி.எஸ்.பி. உமாமகேஸ்வர சர்மா, டி.எஸ்.பி. நஞ்சுண்டப்பா ஆகியோர் உடனிருந்தனர்.