மனைவி, 2 குழந்தையை கொன்ற செக்யூரிட்டிக்கு மரண தண்டனை : கர்நாடக கோர்ட் அதிரடி
ஹூப்ளி: கர்நாடகாவில் குடிபோதையில் மனைவி, 2 குழந்தையை கொன்றவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளியை சேர்ந்தவர் சஞ்சய் (43). தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்தார். இவருடைய மனைவி வித்யா (30). இவர்களுக்கு துஷார் (5) என்ற மகனும், இரண்டரை வயதில் குஷி என்ற மகளும் இருந்தனர். சஞ்சய்க்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி குடிபோதையில் சஞ்சய் வீட்டுக்கு வந்தார். அப்போது வித்யாவுக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய், போர்வையால் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றார். தூங்கி கொண்டிருந்த குழந்தைகளையும் அதே போல கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர். ஹூப்ளி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், விசாரணை முடிந்து நீதிபதி ஆர்.ஜி.ஜோஷி நேற்று தீர்ப்பு கூறினார். மனைவி, 2 குழந்தைகளை கொடூரமாக கொன்ற சஞ்சய்க்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட் செல்ல இருப்பதாக சஞ்சயின் வக்கீல் எஸ்.எம்.பட்டீல் தெரிவித்தார். குடிபோதையில் மனைவி, குழந்தைகளை கொன்றவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.