வித்யாபாலனுக்கு இயக்குனர் திடீர் நிபந்தனை
சென்னை: வித்யாபாலனுக்கு இயக்குனர் திடீர் நிபந்தனை விதித்தார். சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையாக உருவான ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்’ இந்தி படத்தில் கிளாமராக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் வித்யா பாலன். இப்படத்துக்காக இவர் உடல் எடையை அதிகரித்து குண்டானார். இதையடுத்து ‘கஹானி’ படத்தில் நடித்தார். இப்படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்க இயக்குனர் சுஜாய் முடிவு செய்துள்ளார். இதில் மீண்டும் வித்யா பாலனே நடிக்கிறார். இப்படத்திற்காக அவரை உடல் எடையை குறைக்கச் சொல்லி இருக்கிறார். ஆனால் தற்போதைக்கு உடல் எடையை குறைக்க முடியாது என்று வித்யா பாலன் கூறி இருக்கிறார். இதுபற்றி சுஜோய் கூறும்போது,‘அடுத்த வருடம் மே மாதம் கஹானி படத்தின் 2ம் பாகம் ஷூட்டிங் தொடங்க உள்ளேன்.
அதற்கு முன்னதாக வித்யா பாலனை உடல் எடையை குறைக்கும்படி கூறினேன். ஆனால் அவர் தற்போதைக்கு உடல் எடையை குறைக்கக்கூடாது என்று ‘கான்சக்கர்’ என்ற படத்தை இயக்கும் ராஜ் குமார் குப்தா நிபந்தனை விதித்திருக்கிறார். தற்போதுள்ள உடல் எடையுடன் வித்யா பாலன் நடித்த பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் எடையை குறைத்தால் அது படத்தில் வித்தியாசமாக தெரியும். எனவே எடையை குறைக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்திருக்கிறார். ஆனால் வித்யா பாலனுக்கு எடை குறைப்பது என்பது பிரச்னையாக இருக்காது. அவர் இப்படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு கஹானி 2 பட ஷூட்டிங் வருவதற்குள் மெலிய முடியும். எடை குறைப்பது, ஏற்றுவது என்ற இரண்டும் அவரால் எளிதாக செய்ய முடியும்’ என்றார்.