பெ.நா. பாளையம்: அப்பாவை வற்புறுத்தி சிறுமி, 2ம் திருமணம் செய்து வைத்த சம்பவம் கோவை அருகே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோவை துடியலூரை சேர்ந்தவர் மகேந்திரபாரதி (30). இவரது மனைவி தீபா(20). 2005ல் திருமணம் நடந்தது. 2007ம் ஆண்டு தனனிபிரியா என்ற குழந்தை பிறந்தது. 2009ம் ஆண்டு உடல்நலமின்றி தீபா இறந்தார். குழந்தையின் நலனுக்காக மகேந்திரபாரதி மறுமணம் செய்யாமல் பெற்றோர் உதவியுடன் குழந்தையை வளர்த்து வந்தார். மகேந்திர பாரதியின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ராஜேஸ்வரி குடும்பத்தினர் யுகேஜி படிக்கும் தனனிப்பரியாவை சொந்த மகளாக நினைத்து, பாசத்துடன் கவனித்து வந்தனர்.
ராஜேஸ்வரியின் மகள் வனிதா(21), தனனிப்பரியாவின் மீது அளவு கடந்த பாசத்தோடு பழகினார். சுட்டித்தனம் மிகுந்த தனனிப்பரியா எப்போதும் ராஜேஸ்வரியின் வீட்டிலேயே இருந்தார். தனனிப்ரியாவுக்கு நாம் ஏன் தாயாக கூடாது என வனிதாவிற்கு எண்ணம் தோன்றியது. மகேந்திரபாரதியிடம் திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்தார். இதற்கு மகேந்திரபாரதி மறுத்துவிட்டார். இந்நிலையில் வனிதா, மகேந்திர பாரதியின் குடும்பத்தினருடன் பேசி சம்மதம் பெற்றார். தனனிப்ரியாவும், ‘வனிதா எனக்கு அம்மாவாக வரவேண்டும்’என்று கூறி தொடர்ந்து வற்புறுத்தி வந்தால், மகேந்திரபாரதி திருமணத்துக்கு ஒத்துக்கொண்டார்.
வனிதா தனது பெற்றோரிடம் அனுமதி கேட்டபோது, இதற்கு அனுமதி மறுத்து வனிதாவை வீட்டை விட்டு வெளியே விடவில்லை. குழந்தை தனனிப்ரியாவுக்கு வனிதாவை பார்க்காமல் காய்ச்சல் ஏற்பட்டது. பிரச்னையை பெரிதாக்க விரும்பாத மகேந்திரபாரதி துடியலூரில் உள்ள மற்றொரு பகுதிக்கு வீட்டை மாற்றி சென்றார். நேற்று அதிகாலை மகேந்திரபாரதியின் வீட்டுக்கு, தனது வீட்டில் இருந்து தப்பி வனிதா வந்தார். குழந்தை தனனிப்ரியா வனிதாவை கண்டவுடன் ஓடி சென்று கழுத்தை கட்டி பிடித்துக் கொண்டாள். இதை தொடர்ந்து, அருகில் உள்ள கோயிலுக்கு சென்று மகேந்திரபாரதியும், வனிதாவும் திருமணம் செய்து கொண்டனர்.
துடியலூர் காவல் நிலையத்தில் திருமண கோலத்துடன் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு வீட்டு பெற்றோர்களை அழைத்து சமாதானம் செய்து வைத்தனர். தனக்கு அம்மா கிடைத்தவிட்ட மகிழ்ச்சியில் குழந்தை சிரித்த முகத்தோடு தாய், தந்தை இருவரின் கைகளை பற்றி கொண்டு வெளியேறினாள். வனிதா கூறுகையில், ‘முகம் தெரியாத யாரோ ஒருவருக்கு வாழ்க்கைப்படுவதை விட தனனிப்ரியாவுக்கு தாயாக இருப்பதற்காக மகேந்திரபாரதியை திருமணம் செய்து கொண்டேன். இது மகிழ்ச்சியுடன் நான் எடுத்த முடிவு’ என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook