கள்ளக்காதல் விவகாரத்தில் பயங்கரம் : மும்பையில் இளம்பெண் சுட்டு கொலை
மும்பை, :கள்ளக்காதல் விவகாரத்தில், 4 வயது குழந்தையின் கண்முன்னே தாய் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பை ஷெவ்ரி பகுதியைச் சேர்ந்தவர் கரீம் கான். இவரது மனைவி ஷமீனா கான்(27). இவர்களுக்கு 4 குழந்தைகள். ஷமீனா நேற்று தனது 4 வயது பெண் குழந்தையுடன் கடைக்கு சென்றுள்ளார். நேற்று மும்பையில் நவராத்திரி விழாவையொட்டி விசர்ஜனம் நடைபெற்றது. இதனால் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அதோடு ஒலி பெருக்கிகளின் சத்தமும் அதிகமாக இருந்தது. குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்த ஷமீனாவை பின்னால் வந்த அபாஸ்(எ)பிகாரி என்பவர் பின்னந் தலையில் சுட்டுள்ளார். இதில் ஷமீனா அலறியபடியே சுருண்டு விழுந்தார். விசர்ஜன சத்தத்தை பயன்படுத்தி அபாஸ் தப்பியோடி விட்டார்.
நடந்த சம்பவம் எதுவும் குழந்தைக்கு தெரியவில்லை. தாய் திடீரென நிலைகுலைந்து விழுந்ததைக் கண்ட குழந்தை அருகில் இருந்த பாட்டி வீட்டுக்கு ஓடிச் சென்று அம்மாவின் தலையில் யாரோ கல்லால் எறிந்து விட்டதாகக் கூறியுள்ளது. உடனடியாக அங்குச் சென்ற உறவினர்கள் ஷமீனாவை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அப்போது ஷரீனா தனது தாயிடம், அபாஸ்தான் தன்னைச் சுட்டதாகக் கூறிவிட்டு மயக்கமடைந்துள்ளார். மருத்துவமனைக்கு செல்லும் முன்பே அவர் இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். போலீசார் கூறுகையில், ‘இது கள்ளக்காதல் விவகாரமாகத்தான் தோன்றுகிறது. கொலையாளியை விரைவில் பிடித்து விடுவோம்’ என்றனர்.