திருப்பூர்: திரைப்பட பாடகி சின்மயி கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில், டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் சிலர், தனது படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதாக புகார் தெரிவித்திருந்தார். இதன் பேரில் வழக்கு பதிந்து விசாரித்த சென்னை சைபர் கிரைம் போலீசார், திருப்பூர் மாவட்டம், அவிநாசியை சேர்ந்த ராஜன் என்ற ராதா மணாளனை 2 தினங்களுக்கு முன் கைது செய்தனர். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக பணியாற்றும் இவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, கைதும் செய்யப்பட்டதால் இவரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்படி இவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ராஜன் என்ற ராதாமணாளன், கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இணையதளத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக தனது பதிவுகளை எழுதி வரும் இவருக்கு, இணையதளம் மூலம் ஏராளமான நண்பர்கள் உள்ளனர். இணைய தளத்தில் ஏற்பட்ட நட்பு மூலமாக காதல் திருமணமும் செய்து கொண்டார். பாடகி சின்மயி உடனும் நட்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை தமிழர் படுகொலை சம்பவங்கள் நடந்ததையடுத்து, அங்கு நடக்கும் இசை நிகழ்ச்சியில் சின்மயி பங்கேற்றார். இதை விமர்சித்து ராஜன் தெரிவித்த கருத்துகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே பிரச்னைகளை ஏற்படுத்தியது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook