மாணவியை பலாத்கார முயற்சி : 8ம் வகுப்பு மாணவர்கள் சிறுவர் சிறையில் அடைப்பு
உடுமலை: வகுப்பறையில் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற 4 மாணவர்கள் கோவை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த பெருமாள்புதூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு மாணவியை, 8ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளியை நேற்று பெற்றோர் முற்றுகையிட்டு, கேட்டை இழுத்து மூடினர். இதனால் பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பள்ளியை திறக்க விடமாட்டோம் என பெற்றோர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மார்ட்டின் கிருபானந்தம் குமரலிங்கம் போலீசில் 4 மாணவர்கள் மீதும் புகார் கொடுத்தார். 4 பேர் மீதும் 354 (பலாத்கார முயற்சி), 506/1 (மிரட்டல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு, கோவையில் உள்ள சீர்திருத்த பள்ளியில் (சிறுவர் சிறை) அடைக்கப்பட்டனர். இதனால் சமாதானம் அடைந்த பெற்றோர் போராட்டத்தை கைவிட்டனர்.
நேற்று மாலை 6 மணிக்கு பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) கரோலின் தலைமையில் கூட்டம் நடந்தது. டிஇஓ கரோலின் பேசுகையில், எந்த பிரச்னையாக இருந்தாலும் என்னை நேரடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், பல நாட்கள் மதியத்துக்கு மேல் பள்ளிக்கு ஆசிரியர்கள் வருவதில்லை, ஒழுங்காக பாடம் நடத்துவதில்லை என பெற்றோர் கூறினர். அனைத்தும் சரி செய்யப்படும் என டிஇஓ உறுதிஅளித்தார். பள்ளி இன்று வழக்கம்போல் இயங்கியது.