சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உள்பட தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் 40 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவன் உள்பட 4 பேர் பலியானது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு அறிகுறியுடனும் வருபவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏடிஸ் ஏஜிப்டி வகை கொசு கடிப்பதால் பரவும் டெங்கு காய்ச்சல் கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தொடர் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, மூட்டு வலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 3 நாட்களில் மட்டும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 50 பேர் சிகிச்சைக்கு வந்துள்ளனர். இவர்களில் 12 பேருக்கு டெங்கு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவர்களை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 5 குழந்தைகளும், எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 7 குழந்தைகளும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒரு பெண் உள்பட 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வடசென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க ஸ்டான்லி அரசு மருத்துவமனை, தண்டையார்பேட்டை தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனையில் சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனை தனி வார்டில் இதுவரை 20-க்கு அதிகமானோர் அட்மிட் ஆகியுள்ளனர். இதில் 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கடும் காய்ச்சல் காரணமாக தினமும் 100-க்கும் அதிகமானோர் தண்டையார்பேட்டை மருத்துவமனைக்கு புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் அதிக காய்ச்சல் இருந்த 30 பேர் தனி வார்டில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு டெங்கு உள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரி எடுத்து, பரிசோதனைக்காக கிண்டி கிங் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் சென்னை மற்றும் புறநகரில் நேற்று வரை 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 10 பேர் டெங்கு அறிகுறியுடன் சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு வந்துள்ளனர். இவர்களின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தீவிரமானதில் ஐஸ்ஹவுஸ் போலீஸ் குடியிருப்பை சேர்ந்த கல்லூரி மாணவன் சாம்ஜி (26) மற்றும் திருவேற்காடு பள்ளி மாணவன் சுதாகர் (17) ஆகியோர் சென்னை ஜி.ஹெச்.சில் நேற்று இறந்தனர். பொன்னேரியை சேர்ந்த மூன்றரை வயது குழந்தை மதுமிதா கடும் காய்ச்சல் காரணமாக எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாள். டெங்கு அறிகுறி இருந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 10-ம் தேதி குழந்தை இறந்துவிட்டது.
விடாத காய்ச்சல், சளி காரணமாக ஸ்டான்லியில் சிகிச்சை பெற்று வந்த மாதவரத்தை சேர்ந்த சத்யா (26), கடந்த 9-ம் தேதி இறந்தார். இவர்கள் டெங்கு காய்ச்சலால் இறந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். இதையடுத்து, சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இறப்புகளுக்கு டெங்கு காரணம் அல்ல என்று கூறும் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். டெங்கு கட்டுக்குள் இருப்பதாக கூறி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கொளசம்பட்டி மூலக்கரையில் 6 வயது சிறுமி கிருத்திகா டெங்கு காய்ச்சலால் கடந்த 25-ம் தேதி இறந்தாள். இந்நிலையில், சேலம் அரசு மருத்துவ கல்லூரியில் நர்சிங் டிப்ளமோ 3ம் ஆண்டு மாணவி முத்துலட்சுமி (21) சில நாட்களாக தொடர் காய்ச்சால் பாதிக்கப்பட்டு சேலம் ஜி.ஹெச்.ல் சேர்க்கப்பட்டார். ரத்த பரிசோதனை செய்ததில் டெங்கு என தெரியவந்தது. பொன்னம்மாபேட்டை காந்தி நகரை சேர்ந்த 3 வயது குழந்தை மைதிலியும் டெங்கு காய்ச்சல் தாக்கி சேலம் ஜிஹெச்.சில் சேர்க்கப்பட்டுள்ளார். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் இதுவரை 8 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த 6 வயது சிறுவன் யாசிர், கடந்த 20 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குறையாததால், ரத்த மாதிரிஎடுத்து பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. வேலூர் நகரம் மற்றும் சுற்றுப்புறங்களில் டெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் மேலும் பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 2 பேருக்கு டெங்கு இருப்பது ரத்த பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள் ளனர். ஒரு நர்சின் மகனுக்கு டெங்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு, சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் 5 பேர், நாகை மாவட்டத்தில் 15 பேர், கடலூர் மாவட்டத்தில் ஒருவர், கோவையில் 10 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் அதிகமாகி சிலர் பலியாவதாகவும் தகவல் வந்த வண்ணம் உள்ளது. டெங்கு அறிகுறியுடன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இன்று 4 பேர் அட்மிட் ஆகினர். ‘டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட உள்ளது. மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 456 தனியார் மருத்துவமனைகளில் டெங்கு நிலவரம் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook