பெங்களூர்: தாம்பத்ய உறவுக்கு ஒத்துழைக்க மறுத்ததால் மயக்க மருந்து கொடுத்து டி.வி. நடிகையை கொன்றதாக கணவன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுபற்றிய விவரம் வருமாறு: கன்னட டிவி நடிகை ஹேமாஸ்ரீ (28). இவருக்கும் தொழிலதிபர் சுரேந்திர பாபு(52) என்பவருக்கும் கடந்த வருடம் ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த இரண்டாவது நாளில் ஹேமாஸ்ரீ போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘தன் விருப்பமில்லாமல் குடும்பத்தார் சுரேந்திர பாபுவுடன் கட்டாய திருமணம் செய்து வைத்து விட்டனர்’ எனக் கூறியிருந்தார். இதை தொடர்ந்து நடந்த சமரச பேச்சில் கணவருடன் சேர்ந்து வாழ ஹேமாஸ்ரீ ஒப்புக் கொண்டார். ஆனால், தாம்பத்ய உறவுக்கு சுரேந்திர பாபுவுடன் ஒத்துழைக்க ஹேமாஸ்ரீ மறுத்து வந்தார். இதனால் வெறுப்பில் இருந்த சுரேந்திரபாபு, ஹேமாஸ்ரீயை வழிக்கு கொண்டுவர திட்டமிட்டு காத்திருந்தார். கடந்த திங்கட்கிழமை ஹேமாஸ்ரீ ஒரு படப்பிடிப்புக்காக ஐதராபாத் செல்ல வேண்டியிருந்தது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார் ஹேமாஸ்ரீ. இதையறிந்து, தானும் ஒரு வேலைக்காக ஐதராபாத் செல்வதாகவும் தன்னுடன் காரில் வருமாறும் ஹேமாஸ்ரீயை அழைத்தார் சுரேந்திர பாபு. அதற்கு ஹேமாஸ்ரீயும் சம்மதித்தார். உற்சாகமடைந்த சுரேந்தர் பாபு அனந்தபூரில் உள்ள பண்ணை வீட்டில் ஒரு அறையை புக் செய்தார்.
திங்கட்கிழமை காலை இருவரும் காரில் ஐதராபாத்துக்கு புறப்பட்டுள்ளனர். மாலையில் பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இரவு தங்கி விட்டு காலையில் ஐதராபாத் செல்லலாம் எனக் கூறியுள்ளார். கணவரின் திட்டத்தை புரிந்து கொண்ட ஹேமாஸ்ரீ தனக்கு தனி அறை ஒதுக்குமாறு பண்ணை வீடு நிர்வாகிகளிடம் கேட்டுள்ளார். அவர்கள் மறுக்கவே ஒரே அறையில் இருவரும் தங்கினர். இரவில் இருவருக்கும் சண்டை நடந்ததை அடுத்து இருவரும் அங்கிருந்து கிளம்பியதாக பண்ணை வீடு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஹேமாஸ்ரீ செவ்வாய்கிழமை இறந்த நிலையில் சுரேந்திர பாபுவால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். காரில் சென்று கொண்டிருந்தபோது ஹேமாஸ்ரீ திடீரென வாந்தி எடுத்தாகவும், அதனால் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் கூறினார். ஆனால் பிரேத பரிசோதனையில் ஹேமாஸ்ரீ உடலில் குளோரோபார்ம் இருந்ததாக தெரிய வந்துள்ளது. எனவே மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து, தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள சுரேந்திர பாபு முயற்சித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து சுரேந்திர பாபு மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook