சென்னை: தாட்கோ மூலம் மானியத்துடன் கடன் உதவி பெற கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தாட்கோ மேலாண்மை இயக்குனர் சுகந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து தாட்கோ மேலாண்மை இயக்குனர் ஆ.சுகந்தி விடுத்துள்ள அறிக்கை: தாட்கோ மூலம் மானியம் வழங்குவதற்காக இந்த வருடம் ரூ.111.25 கோடி நிதியினை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கீடு செய்துள்ளார். இக்கடன் உதவி பெற அக்டோபர் 10ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்ற கால அவகாசம் தற்போது 21ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மானியத்துடன் கூடிய இக்கடன் உதவி பெற விண்ணப்பிப்பவர்கள் இந்து ஆதிதிராவிடர்களாக இருக்க வேண்டும். கண்டிப்பாக 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் http// application. tahdco.com என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை ஆன்லைனிலே பதிவு செய்யவேண்டும். பதிவு செய்யும் போது குடும்ப அட்டை எண் அல்லது இருப்பிட சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று ஆகியவற்றின் எண், வழங்கப்பட்ட தேதி ஆகியவற்றை அதற்கான இடத்தில் அவசியம் பதிவு செய்யவேண்டும். அதுபோல் திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதியையும் அதற்கான இடத்தில் குறிப்பிடவேண்டும். புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். மாவட்டங்களுக்கு திட்டங்கள் வாரியாக ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையை தாண்டினால் அப்பதிவு ஏற்கபடாது. ஒரு குடும்ப அட்டையை வைத்து ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மகளிர் சுய உதவி குழு சுழல்நிதித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் மகளிர் அனைவருமே 18 வயது நிரம்பியவர்களாக இருக்கவேண்டும். பரிசீலனைக்குப் பின்னர் விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு அனுப்பப்படும். வங்கிகள் கடன் வழங்க உத்தரவாதம் தெரிவித்தவுடன் மானியம் வங்கிகளுக்கு விடுவிக்கப்படும். இவ்வாறு சுகந்தி தெரிவித்துள்ளார்.