சென்னை: தமிழகத்தில் தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் டிஜிபி லத்திகா இன்று காலையில் ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடைபெற உள்ளது. ஒரு மாதத்துக்குப் பின் மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தல் பாதுகாப்பு குறித்தும், அமைதியாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்துவது குறித்தும் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்’ என்று அதிகாரிகளிடம் குரேஷி கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, தமிழக டிஜிபி லத்திகா, இன்று காலையில் டிஜிபி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட், தேர்தல் பிரிவு ஐஜி சுந்தரமூர்த்தி, மேலும் கோவை, திருச்சி, சேலம், மதுரை, நெல்லை ஆகிய மாநகர போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐஜிக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக போலீசில் உள்ள 90 ஆயிரம் பேரையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதைத் தவிர, ஊர்க்காவல்படை, தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவத்தினர் ஆகியோரை பணியில் ஈடுபடுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. தேர்தல் முடியும் வரை நகரில் பல இடங்களில் தீவிர வாகன சோதனை நடத்துவது, பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுப்பது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்தும், விஐபிக்கள் பலர் பிரசாரத்துக்கு வர உள்ளதால் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், தேர்தல் பிரசாரங்கள் அமைதியாக நடைபெற போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது’’ என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook