பேஸ்புக்கில் அவதூறு : காதலனை குத்தி கொன்றார் இளம்பெண்
சான் ஜுவான்: பேஸ்புக்கில் அவதூறான கருத்தை சொன்னதால் ஆத்திரமடைந்த இளம்பெண், தனது பாய் பிரெண்டை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
அமெரிக்காவை ஒட்டி அமைந்துள்ள கரீபியன் தீவு நாடு போர்ட்டோரிகோ. இங்குள்ள கோமரியோ நகரை சேர்ந்தவர் வில்னிலியா சான்சஸ் பால்கன் (27). இவரது காதலன் ஜீசஸ் ரிவெரா அல்காரின் (25). இருவரும் பல இடங்களுக்கும் சுற்றி வந்தனர். பேஸ்புக்கின் வாய்ஸ் கால், வீடியோ காலிங் மூலமாகவும் காதலை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில், பால்கன் பற்றி ஜீசஸ், பேஸ்புக்கில் அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பால்கன் நேற்று முன்தினம் காதலன் வீட்டுக்கு சென்றார். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தி கொலை செய்தார். சம்பவ இடத்தில் 10 வயது சிறுவன், 2 மாத பெண் குழந்தையை தவிர வேறு யாரும் இல்லாததால், பால்கன்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் கூறுகின்றனர். பால்கன் பற்றி பேஸ்புக்கில் ஜீசஸ் என்ன சொன்னார் என்பதும் தெரியவில்லை. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.