Untitled Document
2011
15
Mar
உணவு, குடிநீர் கிடைக்காமல் ஜப்பானில் மக்கள் தவிப்பு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

டோக்கியோ: பூகம்பம் & சுனாமி & அணு உலையில் வெடிப்பு இப்படி அடுத்தடுத்து பேரழிவு ஜப்பானை புரட்டி எடுக்கிறது. இதனால், தற்போது உணவு மற்றும் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இயற்கை பேரழிவால் குடும்பத்தினரை இழந்தும் வீடுகளை இழந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஆங்காங்கே சாலைகள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ளனர். தற்காலிக மருத்துவ முகாம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எங்கு பார்த்தாலும் உணவு, குடிநீருக்கு மக்கள் அலைமோதுவது பரிதாபமாக உள்ளது. மருத்துவமனைகள்: மியாகி மாநிலத்தில் பூகம்பம், சுனாமியால் காயமடைந்து மீட்கப்பட்ட, செண்டாய் தலைநகர் டகாஜோ நகரில் உள்ள செனன் அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான முதியவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு போதுமான மருந்துகள் இல்லை என்றும் கடந்த 2 நாட்களாக உணவு தரப்படவில்லை என்றும் முதியவர்கள் கதறினர்.

இது பற்றி அங்கு முகாமிட்டுள்ள சர்வதேச உதவிக் குழுவை சேர்ந்த சாம் டெய்லர் கூறுகையில், ‘‘குறைந்த அளவு உணவு மற்றும் குடிநீர்தான் கிடைக்கிறது. உயிர் காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை. இந்த சூழ்நிலையில் முதியவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு குறைவு. உடனடியாக உணவு மற்றும் மருந்து சப்ளையை அதிகரிக்க வேண்டும்’’ என்றார்.

பலி 16,000 ஆக உயர்வு?

பூகம்பம், சுனாமிக்கு மியாகி உட்பட ஜப்பானின் வடகிழக்கு கடலோர பகுதியை சேர்ந்த 16,000 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 2,000 பேர் பலியானதாக அரசின் தகவல் தெரிவிக்கிறது. எனினும், மீட்புப் பணிகள் முழுவீச்சில் தொடரும் நிலையில் இடிபாடுகளில் இருந்து ஏராளமான சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அந்தப் பகுதிகளில் காணாமல் போனவர்கள் பற்றிய கணக்கெடுப்பும் நடைபெறுகிறது. 20,000க்கும் மேற்பட்டோரை காணவில்லை என சமூக நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அணுவை துளைத்து... துளைத்து...

பூமியில் கிடைக்கும் கனிமப்பொருட்களில் யுரேனியம், ப்ளூட்டோனியம் முக்கியமானவை. இவை தான் அணுசக்திக்கு மூலப்பொருட்கள். அணுஉலையில் யுரேனியத்தை செலுத்திய பின், அதில் இருந்து அணுக்கூறுகள் பிளக்க, பிளக்க முடிவில்லா வெப்ப சக்தி உருவாகிறது. இதில் இருந்து தான் மின்சாரமும்  தயாரிக்கப்படுகிறது; அணு ஆயுதத்துக்கு  தேவையான சக்தியும் கிடைக்கிறது.

அணுஉலையில் யுரேனியத்தை செலுத்தியவுடன், அணுவை பிளப்பதால் மூன்று வித எனர்ஜி அதாவது எரிசக்தி கிடைக்கிறது. இதைத்தான் ‘பிஷன் ப்ராடக்ட்ஸ்’ எபர். 1. கைனடிக் எனர்ஜி. 2. காமா கதிரியக்க சக்தி. 3. ப்ரீ நியூட்ரான்ஸ். இவை தான் மின்சாரம் முதல் அணுகுண்டு வரை தயாரிக்க கைகொடுக்கின்றன.

அணுஉலையில் அணுவை பிளக்கும் யுரேனியம், ப்ளூட்டோனியம் போன்றவை கம்பிகளாக இருக்கும். இவற்றில் வெளிப்படும் வெப்பம் அதிகரிக்கும் போது தான் ஆபத்தே. இதை கட்டுக்குள் வைத்திருப்பது, இதில் பொருத்தப்பட்டுள்ள ‘கோர்’ என்ற சாதனம்.

இந்த வெப்பத்தை தணித்து கட்டுக்குள் வைக்கவே, கனநீர், திரவ சோடியம், ஹீலியம் போன்ற ஏதாவது ஒன்று செலுத்தப்படுகிறது.

கட்டுக்குள் உள்ள வெப்பசக்தி, அடுத்து டர்பைன் வழியாக செல்லும் போது தான் மின்சாரம் தயாரிக்கும் பணி நடக்கிறது.

மின்சாரம் தயாரிக்கப்பட்டதும், வழக்கமான மேல்நிலை கம்பிகள் மூலம் கப்பலுக்கும் கூட மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. நீர்மூழ்கிக்கும் கூட ஒளியூட்டுகிறது.

ஆக்கமும்... அழிவும் தான் அணுசக்தி

அணுவை துளைக்க, துளைக்க அதன் சக்தியில் ஆக்கமும் இருக்கிறது; அழிவும் இருக்கிறது. மின்சாரம் தயாரிப்பது, விமானத்தை இயக்க பயன்படுவது, நீர்மூழ்கிகளை இயக்குவது, கேன்சர் சிகிச்சைக்கு உதவுவது, மருத்துவ இமேஜிங் பரிசோதனைகளுக்கு ஐசோடோப்களை உருவாக்குவது ஆகியவை ஆக்கமாக சொல்லலாம்.அழிவு என்ன தெரியுமா? அணு குண்டு மற்றும் அணு ஆயுதங்கள் தான். ஒரு நகரத்தையே அழிக்க ஒரு அணுகுண்டு போதும். அணு உலையில் ஏற்படும் விபத்தினாலும் கதிர்வீச்சு மூலம் அழிவு ஏற்படும்.  

அணு உலை வெடித்த பின்னணி

அணுக்கலன் உலோகத்தால் ஆனது. அதனால் அது வெடிப்பது என்பது அரிது. காரணம், அதில் எப்போதும் வெப்பம் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், வெப்ப மிகுதியால் அதை சுற்றி உள்ள அடுத்தடுத்த கான்கிரீட் கொள்கலன்கள் தான் வெடிக்க வாய்ப்புண்டு.

ஜப்பானில் அணுஉலைகள் மூன்றில் வெப்பம் அதிகமாகி, ஆபத்தை உருவாக்கியிருக்கிறது. இதற்கு காரணம், பூகம்பம், சுனாமி, எரிமலை சீற்றம் போன்றவை தான். வெப்பம் கட்டுக்கடங்காமல் போக, கடல்நீர் உள்செலுத்தப்பட்டு, தணிக்கும் முயற்சியும் தோல்வி அடைந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இதில் எந்த அளவுக்கு ஆபத்து என்பதை பொறுத்து தான் விபரீதங்கள் உள்ளன. அந்த நாட்டு மக்களுக்கு வெளிப்படையாகவே சில மாதங்களில் தெரியும். அடுத்து இந்தியா வரை கூட பரவ வாய்ப்பு உண்டு.

எப்படி செயல்படுகிறது?

ரியாக்டரின் மையப் பகுதியில் கோர் கம்பிகளை சுற்றி நீர் இருக்கும். அதற்கு அதிக நீர் தேவை காரணமாகவே அணுமின் நிலையங்கள் பெரும்பாலும் ஆறு, கடலோரப் பகுதிகளில் அமைக்கப்படும்.

அணுக்களை பிளக்கும்போது ஏற்படும் வெப்பம் ஒரே முறையாக வெளியாகாமல் தடுக்க கருவிக்குள் 2 அடுக்கு சுற்றுச் சுவர்கள் இருக்கும். இந்த நடைமுறையில் டர்பைன், ஜெனரேட்டரும் முக்கிய பங்கு வகிக்கும். பயங்கர சக்தியுடன் அணுவை பிளக்கும்போது கோர் கம்பிகளில் வெளிப்படும் வெப்பத்தால் நீர் கொதித்து ஆவியாகி, அதனுடன் டர்பைன் செயல்பட்டு ஜெனரேட்டரில் மின்சக்தியாக மாற்றப்படும்.

கதிர்வீச்சு ஆபத்து  என்னென்ன?

அணுஉலை கதிர்வீச்சு கசிந்து, உலையை குளிர்விக்க பயன்படுத்தப்பட நீரில் பரவும். அதன் மூலம் கடல்நீரில் பரவும்; காற்றில் பரவும்; மண்ணில் இறங்கி, செடி, கொடி, பயிர்களை அழிக்கும். வானில் நீராவியாக பரவி, மழை தூறலில் கூட நம் தலையில் விழும். இப்படி அணுக்கதிர் ஆபத்துக்கு அளவே கிடையாது.

சாதா காய்ச்சல், இருமலில் தான் ஆரம்பிக்கும்; காசநோய் முதல் கேன்சர் வரை வரும். உறுப்புகளை ஊனமாக்கும். காலம் காலத்துக்கு பாதிப்பு நீடிக்கும்.

ரஷ்ய செர்னோபில் விபத்து நடந்து 25 ஆண்டாகியும் இன்னும் அதன் பாதிப்புக்கு அளவே இல்லை.

குட்டிப்பையன்... குண்டு மனிதன்

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதியை யாராலும் மறக்க முடியாது; ஆம், இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில், நடந்த பயங்கரம் அது. ஜப்பானிய நகரான ஹிரோஷிமா மீது யுரேனியம் சார்ந்த துப்பாக்கி வடிவ அணுகுண்டை போட்டது அமெரிக்கா. இந்த குண்டுக்கு பெயர் ‘லிட்டில் பாய்.’ மூன்று நாளுக்கு பின், அதே நாட்டின் நாகசாகி நகரில் அமெரிக்கா மீண்டும் போட்டது. இந்த குண்டுக்கு பெயர் ‘பேட் மென்.’ அப்போது ஏற்பட்ட அழிவுகளுக்கு பின் தான், அணுவை மின்சாரத்துக்கு மட்டும் பயன்படுத்த உலக நாடுகள் உறுதி பூண்டன. நிலைத்ததா அந்த உறுதி...?

யாரிடம் தான் இல்லை அணுகுண்டு?

ஐம்பது ஆண்டுகளை கடந்தாலும் ஹிரோஷிமா, நாகசாகி அழிந்த கதையை இன்னும் மறக்கவில்லை பல நாடுகளும். ஆனாலும், குண்டுபோட்ட அமெரிக்காவில் ஆரம்பித்து, சீனா, பாகிஸ்தான், பிரான்ஸ், வடகொரியா, இஸ்ரேல், ரஷ்யா, பிரிட்டன் மட்டுமல்ல இந்தியாவும் அணு குண்டு தயாரிக்கும் திறன் படைத்துள்ளன.  இதுவரை இந்த நாடுகள் சேர்ந்து 2 ஆயிரம் முறை பூமிக்கடியில் அணுகுண்டு சோதனைகளை நடத்தியுள்ளன.

எஸ்எம்எஸ் பயமுறுத்தல்

ஜப்பான் அணுஉலை வெடித்த சமாச்சாரத்தை நம்மூரில் எஸ்எம்எஸ் எச்சரிக்கை வாசகங்களாக வெளியிட ஆரம்பித்து விட்டனர். அவற்றில் ஒரு வாசகம்: ‘ஜப்பானில் அணுஉலை வெடித்தது. நாளையோ, அடுத்த ஒரு வாரத்திலோ மழை பெய்தால், தூறல் போட்டால் வெளியில் தலை காட்டாதீர்கள். அது அமில மழையாக இருக்கலாம். அதில் நனைந்தால், தலைமுடிக்கு பாதிப்பு வரும். தோல் அரிக்கும்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me