இன்சூரன்ஸ் தொகைக்கு ஆசைப்பட்டு 10வது கணவனை கொன்று எரித்த அமெரிக்க பெண் சிறையில் அடைப்பு
வாஷிங்டன்: கணவன் பெயரில் இருக்கும் இன்சூரன்ஸ் தொகை ரூ.96 லட்சத்துக்கு ஆசைப்பட்டு அவரை கொலை செய்து எரித்த அமெரிக்க பெண் சிக்கினார். 36 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கில் அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்தவர் ஷரோன் மேக்ஸ்வெல் (44). இவர் ஏற்கனவே 9 ஆண்களை மணந்து அவர்களை விவாகரத்து செய்தவர். இந்நிலையில் அமெரிக்காவின் ஓர்சிட்டி பகுதியில் வசித்த கார்டன் மேக்ஸ்வெல் (46) என்பவரை கடந்த ஆண்டில் 10வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவர் பெயரில் பெரும் தொகைக்கான பாலிசி இருப்பதை ஷரோன் அறிந்து கொண்டார். அதனை கைப்பற்றும் நோக்கில் இருந்த அவர் கணவரை கொலை செய்து எரித்துவிட்டார். ஆனால், தன் 19 வயது மகன் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டதாக போலீசில் பொய் புகார் கொடுத்தார்.
விசாரணையின்போது முன்னுக்குப்பின் முரணாக தகவலளித்த ஷரோன் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவர்கள் ஷரோனிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் உண்மை வெளியாகி உள்ளது. இறுதியில், பணத்துக்கு ஆசைப்பட்டு கணவரை கொலை செய்ததை ஷரோன் ஒப்புக்கொண்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்தது. கணவர் கார்டன் பெயரில் ரூ.96 லட்சம் மதிப்பில் இன்சூரன்ஸ் பாலிசி இருப்பதை சுருட்டும் நோக்கில்தான் கொலை செய்தார் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமானது. இதையடுத்து, 2048ம் ஆண்டு வரை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் ஷரோன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரூ.5.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.