ஈரோடு: குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கில் முன்னாள் போலீஸ் உயர் அதிகாரியிடம் பணியாற்றிய ஆர்டர்லியை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த செந்தில்குமார், அவரது மனைவி தனக்கொடி, பேராசிரியர்கள் வரதராஜன், சுதாகர் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து நாமக்கல்லை சேர்ந்த செல்வராஜ், தியாகராஜன், அவரது தம்பி செந்தில்குமார் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பாலன் (எ) ஸ்ரீதர்ராஜ், கோவை கோர்ட்டில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, ஆந்திராவை சேர்ந்த ராவ் (எ) ஆனந்த ராவ் என்பவரிடம் வினாத்தாள் பெற்றதாக தெரிவித்துள்ளார். ஆனந்த ராவை தேடி தனிப்படை போலீசார் ஆந்திராவில் முகாமிட்டுள்ளனர். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னை மேடவாக்கம் சதீஷ்குமார், அரும்பாக்கம் மோகன்பாபு, எழும்பூர் ஜெயஸ்ரீநிவாசன், நாமக்கல் செல்வராஜ், திருவள்ளூர் தியாகராஜன், அவரது தம்பி செந்தில்குமார் உள்ளிட்ட 6 பேரும் ஜாமீன் கேட்டு ஈரோடு ஜே.எம். 2-வது கோர்ட்டில் மனு செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நாளை (4-ம் தேதி) நடக்க உள்ளது.
இதற்கிடையே, தியாகராஜன், செந்தில்குமாரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஆனால், அவர்கள் எதுவும் கூறவில்லை என தெரிகிறது. இந்நிலையில், முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி ஒருவரின் வீட்டில் ஆர்டர்லியாக பணியாற்றி வந்த கான்ஸ்டபிளை தனிப்படை போலீசார் பிடித்துள்ளனர். அவரை சித்தோடு போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு திடுக்கிடும் தகவல்களை ஆர்டர்லி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook