திருவொற்றியூர்: போஸ்ட் ஆபீசில் டெபாசிட் செய்ய வரும் வாடிக்கையாளர்களை ஏமாற்றி ரூ.1.5 கோடி வரை மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெண் ஏஜென்ட் ஒருவர் சிக்கியுள்ளார். திருவொற்றியூரில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் தேரடி தெரு அருகே தபால் நிலையம் உள்ளது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சிறுசேமிப்பு, தொடர் வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளனர். இங்கு வாடிக்கையாளர்களிடம் பணம் சேகரிக்க, புதிய கணக்கு துவக்க 10க்கும் மேற்பட்ட ஏஜென்ட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கு தாம்பரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (70). திருவொற்றியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது நண்பர் திருவொற்றியூர் கலைஞர் நகரில் வசிக்கிறார். நண்பரின் மனைவி அமிர்தம்மாள் (55), போஸ்ட் ஆபீசில் ஏஜென்டாக உள்ளார். இதனால் சுப்பிரமணி, 2006ல் ஓய்வு பெற்றபோது கிடைத்த ரூ.7 லட்சத்தை அமிர்தம்மாள் ஏற்பாட்டில் தபால் நிலையத்தில் டெபாசிட் செய்துள்ளார். கணக்கு வழக்குகள் பார்ப்பது, வட்டிப் பணம் பெறுவது போன்ற பணிகளை அமிர்தம்மாளிடமே சுப்பிரமணி ஒப்படைத்துள்ளார். 2010ல் சுப்பிரமணியின் டெபாசிட் காலம் முடிந்தது. ‘போஸ்ட் ஆபீசில் இருந்து டெபாசிட் பணத்தை உங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளனர். பணத்தை நானே எடுத்து தருகிறேன்’ என்று கூறி செலானில் சுப்பிரமணியிடம் அமிர்தம்மாள் கையெழுத்து வாங்கியுள்ளார்.
பணத்தை எடுத்து சுப்பிரமணியிடம் தராமல் தானே செலவு செய்துள்ளார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசில் சுப்பிரமணி புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்கு பதிந்து, ஏஜென்ட் அமிர்தம்மாளை பிடித்து விசாரித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக 150க்கும் அதிகமான வாடிக்கையாளர்களிடம் சிறுசேமிப்பு, வைப்புத் தொகை முதலீடு தொடர்பாக வாங்கிய பணம் ஒன்றரை கோடிக்கு மேல் அமிர்தம்மாள் மோசடி செய்துள்ளாதாக கூறப்படுகிறது. தண்டையார்பேட்டையை சேர்ந்த ஒரு டாக்டரிடம் ரூ.45 லட்சம், தனியார் ஊழியரிடம் ரூ.1 லட்சம், வியாபாரி ஒருவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த சம்பவம் திருவொற்றியூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோசடி செய்தது எப்படி? பத்தாம் வகுப்பு படித்தவர்கள் கலெக்டர் பரிந்துரையின் பேரில் போஸ்ட் ஆபீசில் ஏஜென்ட்களாக நியமிக்கப்படுகின்றனர். மக்களிடம் சிறுசேமிப்பின் அவசியத்தை வலியுறுத்துவதுதான் இவர்களது பணி. ஆனால், அமிர்தம்மாள் போஸ்ட் ஆபீஸ் வாசலில் நின்றுகொண்டு பணம் டெபாசிட் செய்ய வரும் வாடிக்கையாளர்களிடம், ‘நான்தான் இங்கு ஏஜென்ட். என்னிடம் பணத்தை கொடுங்கள். அதை உங்கள் கணக்கில் செலுத்துகிறேன்’ என்று கூறி ஏமாற்றியுள்ளார். அவர்களிடம் வாங்கும் பணத்தை கணக்கில் செலுத்தாமலும், போஸ்ட் ஆபீசில் கணக்கு துவங்காமல் போலியாக அட்டைகளை தயாரித்து கொடுத்துள்ளார். அந்த பணத்தை வட்டிக்கு விட்டுள்ளார். வட்டி பணத்தில் வரும் தொகையை வாடிக்கையாளர்களுக்கு கமிஷனாக கொடுத்துள்ளார். இந்த மோசடிக்கு தபால் நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் உடந்தையா என்றும் விசாரணை நடக்கிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook