பூந்தமல்லி: திருவேற்காடு அருகே குடித்து விட்டு கணவன் செய்யும் கொடுமை தாங்க முடியாததால் கை, கால்களை கட்டி போட்டு மனைவியே எரித்துக் கொன்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவேற்காடு அடுத்த கோலடி அன்பு நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (39). கொத்தனார். அவருடைய மனைவி பிருந்தா (35). இவர்களது 15 வயது மகள் திருவேற்காடு வேலப்பன்சாவடியில் மசாலா தயாரிக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். 2 மகன்கள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி.
சக்திவேல், குடிப்பழக்கம் உடையவர். சம்பளம் வாங்கி வரும் நாட்களில் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு வந்து மனைவி, மகளிடம் தகராறில் ஈடுபடுவார். மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, அவரை அடித்து துன்புறுத்துவதும், தகாத வார்த்தையால் திட்டுவதும், பொருட்களை தூக்கி போட்டு உடைப்பதுமாக டார்ச்சர் கொடுத்து வந்தார். ஆத்திரத்தில், தாயும், மகளும் சேர்ந்து கை, கால்களை கட்டி போடுவார்கள். போதை தெளிந்ததும் அவிழ்த்து விடுவார்கள். இது வழக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில், தற்போது, ஆடி மாதம் என்பதால் நேற்று வீட்டில் கூழ் ஊற்றும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார் பிருந்தா. இதற்காக உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். மதியம், வழக்கம் போல குடித்து விட்டு வந்து மனைவியை தகாத வார்த்தையால் திட்டினார் சக்திவேல். பொருட்களை தூக்கி போட்டு உடைக்கவும் செய்ததார். ஆத்திரம் அடைந்த உறவினர்கள், அவரை கண்டித்தனர். மாலையில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. அப்போதும் சக்திவேல் போதையில் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டார். இது, மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு கூடுதல் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
பக்கத்து வீட்டை சேர்ந்த அவரது நண்பரான கொத்தனார் செல்வராஜ் என்பவரும் அங்கு வந்து, ‘வீட்டில் சாமி கும்பிடுகிறார்கள், இன்றைக்கும் குடித்து விட்டுத்தான் வர வேண்டுமா?‘ என கேட்டுள்ளார். சக்திவேல் கேட்கவில்லை. தகராறு வலுத்து கொண்டே இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த தாயும், மகளும் சக்திவேலை கட்டி போட்டு விட்டு பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டனர். இரவு 8.30 மணியளவில், ‘போதை தெளிந்திருக்கும்' என நினைத்து வீட்டுக்கு வந்தார் பிருந்தா. பின்னர் சமையல்கட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டார். அப்போதும் சக்திவேலின் அடாவடி குறைந்தபாடில்லை.
இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற பிருந்தா, ‘சொந்தக்காரர்கள் வந்திருக்கிறார்கள், அக்கம் பக்கத்தினரை அசிங்கப்படுத்துகிறாய். தினமும் பிரச்னை செய்கிறாயே’ என்று கூறியபடி கயிற்றால் கை, கால்களை கட்டினார். வாயை ஒரு துண்டால் கட்டினார். பின்னர், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து வந்து சக்திவேலின் உடலில் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். தீ மளமளவென பரவியது. அலறி துடித்தார் சக்திவேல். பின்னர், கதவை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார் பிருந்தா. சிறிது நேரத்தில், சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
வீட்டின் வெளியே நின்றிருந்த பிருந்தாவிடம், ‘வீட்டில் தீ பிடித்து எரிகிறது, நீ வெளியே நிற்கிறாயே' என கேட்டுள்ளனர். இதையடுத்து, ஒன்றும் தெரியாதது போல கதவை திறந்து தீயை அணைக்க முயன்றார் பிருந்தா. அதற்குள் சக்திவேல், உடல் கருகி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து திருவேற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் சம்பவ இடத்துக்கு வந்தார். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சக்திவேல் எரிந்து கிடந்தார். உடனே, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். பின்னர், வழக்கு பதிந்து பிருந்தாவிடம் விசாரணை நடத்தினார். கணவனின் கொடுமை தாங்க முடியாததால் விரக்தியின் உச்சிக்கே சென்ற மனைவி, கை கால்களை கட்டிப் போட்டு தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் திருவேற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘இனிமேல் நிம்மதி' கதறி அழுத மனைவி
‘எம் புருஷனே தீ வெச்சுக்கிட்டார்’ என்று முதலில் நாடகம் ஆடிய பிருந்தா, பின்னர், ‘குடித்து விட்டு கொடுமைப்படுத்தியதாலும், அக்கம்பக்கத்தில் அவமானப்படுத்தியதாலும், நடத்தையில் சந்தேகப்பட்டதாலும் வெறுப்படைந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தினேன். எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இனியாவது நிம்மதி கிடைத்தால் போதும்..’ என்று கதறி அழுதபடி உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், மகள், செல்வராஜ் ஆகியோரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.