செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். செங்கல்பட்டு நகரை சுற்றி மலை, காப்புக்காடுகள், பாலாறு, கொளவாய் ஏரி மற்றும் கல்வி நிலையம், ரயில் நிலையம், அரசு பொது மருத்துவமனை, மாவட்ட நீதிமன்றம், மத்திய தொழுநோய் ஆராய்ச்சி மையம், காய்கறி மார்க்கெட், உணவு விடுதிகள் உள்ளன. இந்த இடங்களுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மக்கள் அதிகம் வசிக்கும் வேதாச்சலம் நகர், அழகேசன் நகர், அண்ணா நகர், ஜெசிகே நகர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர், குப்பைகள் திறந்தவெளி கால்வாய் மூலம் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள கொளவாய் ஏரியில் கலக்கிறது. இதனால் ஏரி மாசடைந்துள்ளது. கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்துவிட்டது. பன்றிகளும், கழிவுநீரில் உருண்டு புரள்கிறது.
பழமையான இந்த நகராட்சியில் இதுவரை பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தவில்லை. இதற்கு பின்பு உருவான மறைமலைநகர், பல்லாவரம் நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று 2003-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செங்கல்பட்டுக்கு பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு திமுக ஆட்சியில் இந்த திட்டத்துக்காக ரூ.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 9 ஆண்டுகளுக்கு முன்பே திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட புல்லேரி ஊராட்சியில் 9 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டு முதல்கட்ட பணி தொடங்கியது. பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டது. 2009-ல் மீண்டும் ரூ.33 கோடி ஒதுக்கப்பட்டும் பணி நடக்கவில்லை.
தற்போது அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பாதாள சாக்கடை திட்டத்துக்காக ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான நிர்வாக ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. இந்த பணிக்காக மக்களிடம் டெபாசிட் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கிராம மக்களும் திருப்போரூர் தொகுதி எம்எல்ஏவான தண்டரை மனோகரனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கலெக்டரும், நகராட்சி நிர்வாகமும் பேச்சுவார்த்தை நடத்தி பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து அனகை முருகேசன் எம்எல்ஏ கூறுகையில், ‘திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி கலெக்டரிடமும் உள்ளாட்சித்துறை அமைச்சர், நகராட்சி நிர்வாக ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளேன்’ என்றார்.
பொதுநல சங்க பிரமுகர்கள் கூறுகையில், ‘கடந்த அதிமுக ஆட்சியில் காங்கிரசை சேர்ந்தவர் நகராட்சி தலைவராகவும் பாமகவை சேர்ந்தவர்கள் எம்எல்ஏ, எம்.பி.யாகவும் இருந்தனர். திமுக ஆட்சியில் அதிமுகவை சேர்ந்தவர் நகராட்சி தலைவராகவும், பாமகவை சேர்ந்தவர்கள் எம்எல்ஏ, எம்.பி,யாகவும் இருந்தனர். இப்போது அதிமுக ஆட்சியில் திமுகவை சேர்ந்தவர் நகராட்சி தலைவராகவும் தேமுதிகவை சேர்ந்தவர் எம்எல்ஏவாகவும், காங்கிரசை சேர்ந்தவர் எம்.பி.யாகவும் உள்ளனர். இப்படி ஒவ்வொரு பதவியிலும் வேறு கட்சியினர் இருப்பதால் பாதாள சாக்கடை திட்டம் கிடப்பில் போடப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. தேமுதிக எம்எல்ஏ, திமுக நகராட்சி தலைவர் என்பதால் ஆளுங்கட்சியினர் பணியை மீண்டும் ரத்து செய்து விடுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது. முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook