இந்தியா தோல்வி :இந்தியா , இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி டவுண்டனில் 3வது ஒன்டேவில் மோதின. முதலில் ஆடிய இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன் எடுத்தது. மிதாலி ராஜ் 138 பந்தில் 4 பவுண்டரியுடன் 92 ரன் எடுத்தார். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 47.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 2,1 என முன்னிலை வகிக்கிறது.
ஆஸி., பாக். வீரர்கள் அதிகம் : இலங்கையில் ஆகஸ்ட் 10ந் தேதி எஸ்.எல்.பி.எல். 20,20 தொடர் நடைபெறுகிறது. இதில் 7 அணிகள் கலந்து கொள்கிறது. அப்ரிடி, கெய்ல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் யாரும் இதில் ஆடவில்லை. ஆஸ்திரேலியாவை சேர்ந்த 18 வீரர்களும், பாகிஸ்தானை சேர்ந்த 13 வீரர்களும் இந்த தொடரில் விளையாடுகின்றனர். மொத்தம் 56 வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடருக்காக ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.
ஸ்வான் காயம் :இங்கிலாந்து , ஆஸி. அணிகள் 4வது ஒருநாள் போட்டியில் நாளை மோதுகின்றன. இந்நிலையில் காயம் காரணமாக இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் கடைசி 2 ஆட்டங்களில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெ.இ. அதிகாரி விலகல் :வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி எர்னெஸ்ட் ஹிலாரி தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். வருகிற அக்டோபர் மாதத்துடன் அவரது ஒப்பந்தம் முடிவடைகிறது.
அர்ஜூனா விருது தேதி நீட்டிப்பு :அர்ஜூனா விருதுக்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெயர் பரிந்துரை செய்யப்படவில்லை. இது தொடர்பாக முறையாக மத்திய விளையாட்டு அமைச்சகம் தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லையென பிசிசிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் விருதுக்கான பரிந்துரை தேதியை விளையாட்டு அமைச்சகம் நீட்டித்துள்ளது. வருகிற 20ந் தேதி வரை பரிந்துரை செய்யலாம் என அறிவித்துள்ளது.
ஆஸி. , பாக். ஆகஸ்டில் மோதல் :ஆஸ்திரேலியா , பாகிஸ்தான் அணிகள் இடையே 3 ஒன்டே மற்றும் மூன்று 20,20 கொண்ட தொடர் ஆகஸ்ட் இறுதியில் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 28ந் தேதியும், 20,20 தொடர் செப்டம்பர் 5ந் தேதியும் நடக்கிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook