சென்னை: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கலெக்டர் ஜெயந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அங்கன்வாடி பணியாளர் 105 பணியிடங்கள், ரூ.2500 - 5000 தரஊதியம், ரூ.500 மற்றும் இதர படிகள் வழங்கப்படும். அங்கன்வாடி உதவியாளர் - 152 பணியிடங்கள், ரூ.1300 - 3000 தர ஊதியம், ரூ.300 மற்றும் இதர படிகள் வழங்கப்படும்.
அங்கன்வாடி பணியாளர் பணியிடத்துக்கு 25 - 35 வயது, அங்கன்வாடி உதவியாளர் 20 - 40 வயது இருத்தல் வேண்டும். அங்கன்வாடி பணியாளர் பணியிடத்துக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தகுதி வாய்ந்த உள்ளுர் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியாக உள்ள மையங்கள் மற்றும் இன சுழற்சி குறித்த விவரங்கள் அந்தந்த பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
அங்கு விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் வரும் 20ம் தேதி மாலை 5 மணி. கல்வி தகுதி சான்று, பிறந்த நாள் குறித்த சான்று, சாதி சான்றிதழ், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் சான்றிதழ், மாற்று திறனாளிகளுக்கான சான்றிதழ் ஆகிய சான்றுகளை விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும்.
இதுகுறித்த விவரம் வேண்டுவோர் அந்தந்த பகுதியிலுள்ள குழந்தை வளர்ச்சித் திட்டஅலுவலர் அல்லது முதன்மை செயலாக்க சிறப்புஆணையர் மற்றும் தேர்வுக்குழு தலைவர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள், 2/124, தியாகராய சாலை, தேனாம்பேட்டை, சென்னை -18 என்ற முகவரியிலோ, 24346390, 24541771,2450772 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ஜெயந்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.