வெளுக்குது வெயில் ஐஸ்பீர் சேல்ஸ் அமோகம்
புதுச்சேரி: அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கி விட்ட நிலையில் புதுவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெயில் 100 டிகிரியை தாண்டுவதால் மக்கள் வீடுகளுக்குள் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளரி, தர்பூசணி, நுங்கு விற்பனை ஜரூராகி உள்ளது. வெயிலை தணிக்க இளைஞர்கள் ஐஸ் பீர்களை நாடுகின்றனர். இதனால் அவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது. ஐஸ் பீர்களை வாங்க கூட்டம் முண்டியடிப்பதாக பார் உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் ஐஸ் பீர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பெரும்பாலான கடைகளில் மதியம் 2 மணிக்குள் ஐஸ் பீர்கள் விற்று தீர்ந்து விடுகிறது. சிலர் சாதா பீர்களை வீடுகளுக்கு வாங்கி சென்று தங்களது வீட்டு பிரிட்ஜுக்குள் வைத்து கோடை வெயிலின் தாகத்தை தீர்த்து வருகின்றனர். தற்போது இளைஞர்கள் அதிகளவில் வருவதால் பீர் விற்பனை கணிசமாக உயர்ந்திருப்பதாக பார் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.