2வது நாளாக பைலட்கள் ஸ்டிரைக் டெல்லி, மும்பையில் விமானங்கள் ரத்து
புதுடெல்லி: ஏர்இந்தியா பைலட்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 2வது நாளாக நீடித்தது. இதன் காரணமாக டெல்லி மற்றும் மும்பையில் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பதவி உயர்வு, போயிங் 787 பயிற்சி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏர்இந்தியா விமான நிறுவன பைலட்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக நேற்று டெல்லி, மும்பையிலிருந்து புறப்பட வேண்டிய 13 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என ஏர்இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. போராட்டத்தை கைவிட நேற்று மாலை 6 மணி வரை கெடு விதிக்கப்பட்டது. இந்த கெடுவை பைலட்கள் நிராகரித்தனர்.
இதை தொடர்ந்து ஏர் இந்தியா பைலட்கள் 10 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டெல்லி, மும்பையில் உள்ள பைலட் சங்கங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு சங்க அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் 2வது நாளாக பைலட்கள் வேலை நிறுத்தம் நீடித்தது. இதன் காரணமாக டெல்லியிலிருந்து புறப்பட வேண்டிய டெல்லி,சிங்கப்பூர், டெல்லி,நியூயார்க் விமானமும், மும்பையிலிருந்து நியூயார்க் புறப்பட வேண்டிய விமானம் உள்பட 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.