மக்கள் குறைகேட்ட பிறகு சட்டசபைக்கு செல்வேன் : விஜயகாந்த் பேச்சு
உளுந்தூர்பேட்டை :கிராம மக்களின் குறைகளை கேட்ட பிறகு சட்டசபைக்கு சென்று பேசுவேன் என திருவெண்ணை நல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலை வர் விஜயகாந்த் பேசினார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் தேமுதிக தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் இன்று இலவச கணினி பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச முயலும்போது மைக் இணைப்பை துண்டித்து விடுகின்றனர். இதனால் மக்கள் பிரச்னை குறித்து சட்டசபையில் பேச முடியவில்லை. மேலும் என்னை சட்டசபைக்கு வரவில்லை என கூறுகின்றனர். தமிழகத்தில் உள்ள கிராமங்கள் தோறும் சென்று மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த பின்னர் சட்டசபையில் பேசுவேன். அதற்காகத்தான் தற்போது சட்டசபைக்கு போகவில்லை. எதிர்க்கட்சி தலைவராக திமுக, அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இருந்தபோது கையெழுத்து போட மட்டுமே சென்றது மக்களுக்கு தெரியும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.