கோவை :பாசி நிறுவன மோசடி வழக்கில் கைதான ஐ.ஜி. பிரமோத்குமாரின் டெல்லி சொகுசு பங்களா பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. ஊட்டியில் எஸ்டேட் வாங்கினாரா என்றும் விசாரணை நடக்கிறது. திருப்பூரில் செயல்பட்டு வந்த பாசி என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனம், பொதுமக்களிடம் ரூ.650 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நிர்வாக இயக்குனர்கள் மோகன்ராஜ், கமலவள்ளி, கதிரவன் ஆகியோர் தலைமறைவாயினர். இதற்கிடையே மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோரை போலீஸ் அதிகாரிகள் சிலர் மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. புகாரில் சிக்கிய டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகைய்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஆயுதப்படை ஐ.ஜி. பிரமோத்குமார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தலைமறைவானார். டெல்லியில் பதுங்கி இருந்த அவரை சிபிஐ தனிப்படை அதிகாரிகள் கைது செய்தனர். அவரை, கோவை அழைத்து வந்து, சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். கோவை ரெட்பீல்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சி.பி.ஐ. எஸ்.பி. தேன்மொழி முன்னிலையில் விசாரணையை அதிகாரிகள் தொடங்கினர்.
விடிய, விடிய நடந்த விசாரணையில், கமலவள்ளி பாலியல் சித்ரவதை செய்யப்பட்டது, அவர் அளித்த வாக்குமூலம் குறித்து பிரமோத்குமாரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. விசாரணையில் பண மோசடியில் தனக்கு உதவியதாக சென்னையை சேர்ந்த முக்கிய பிரமுகரின் பெயரை அவர் கூறியதாகவும், அந்த முக்கிய நபர் எந்தெந்த வகையில் சம்பந்தப் பட்டுள்ளார் என்பது குறித்தும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே டெல்லியில் பிரமோத்குமார், சொந்தமாக வீடு வாங்கிருப்பது தெரியவந்துள்ளது. இவரது வங்கிக் கணக்குகள் மற்றும் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே நேற்று இரவு நடந்த விசாரணையின்போது, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர்கள் சண்முகைய்யா, மோகன்ராஜ் வரவழைக்கப்பட்டனர். அவர்களைப் பார்த்த ஐ.ஜி பிரமோத் குமார், ஆவேசமடைந்தார். அவர்களை வெளியே அனுப்புங்கள் என ஆவேசமாக கத்தினார். அங்கு பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள பிரமோத்குமாரின் சொகுசு பங்களாவின் பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. ஊட்டியில் அவர் எஸ்டேட்டுகள் வாங்கிக் குவித்துள்ளதாக வந்த ரகசிய தகவலை அடுத்து அதுகுறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. இன்று 3வது நாளாக விசாரணை நடக்கிறது. விசாரணை வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook