தண்டையார்பேட்டை :ஐகோர்ட் வளாகத்தில் வாலிபர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். அவர் தற்கொலை செய்தாரா அல்லது கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். சென்னை ஐகோர்ட்டுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை கால கோர்ட் மட்டும் இயங்கி வருகிறது. இதனால் கோர்ட்டுக்கு பொதுமக்கள், வக்கீல்கள் வருவது குறைந்துள்ளது. இன்று காலை 6 மணியளவில் ஐகோர்ட் வளாகத்தில் ரோந்து சென்ற போலீசார், தலைமை நீதிபதி அறை முன்பு உள்ள மரத்தில் வாலிபர் சடலம் தொங்குவதை பார்த்தனர். இதுகுறித்து உதவி கமிஷனர் முரளிக்கு தகவல் கொடுத்தனர். உதவி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வாலிபரின் உடலை இறக்கி, பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. நீலநிற ஜீன்ஸ் பேன்ட் அணிந்திருந்தார். அவர் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். ஐகோர்ட் வளாகத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரத்திலும் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். பல இடங்களில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இதையெல்லாம் மீறி வாலிபர் எப்படி உள்ளே வந்தார்? எப்படி தூக்கில் தொங்கினார் என்பது மர்மமாக உள்ளது. இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook