மதுரை :மதுரை ஆதீனத்துக்குள் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகின்றனர். அங்குள்ள சொத்து ஆவணங்கள், நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் குறித்து மூத்த ஆதீனம் அருணகிரிநாதரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான மதுரை ஆதீனத்தின் 292,வது ஆதீனமாக அருணகிரிநாத சுவாமி 1980,ல் பொறுப்பேற்றார். இந்நிலையில், 293,வது ஆதீனமாக நித்தியானந்தாவை தேர்வு செய்துள்ளதாக அருணகிரிநாதர் அறிவித்தார். மதுரை ஆதீன மடாலயத்தில் கடந்த 29,ம் தேதி பட்டம் சூட்டும் விழா நடந்தது. மதுரை ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதற்கு ஆன்மீகவாதிகளும் இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு மடாதிபதிகள் திரண்டு, நித்தியானந்தா நியமனத்தை ரத்து செய்ய வலியுறுத்தினர். இதுதொடர்பாக சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆதீன சொத்துக்களை நிர்வகிக்க நித்தியானந்தாவுக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை வருமானவரித்துறை அதிகாரிகள் 5 பேர் மதுரை ஆதீனத்துக்குள் அதிரடியாக புகுந்து ரெய்டு நடத்தி வருகின்றனர். காலை 8.30 மணி முதல் ரெய்டு நடந்து வருகிறது. மடத்தின் அறைகளில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். நகைகள் உள்ளிட்ட ஆவணங்கள் குறித்து மூத்த ஆதீனம் அருணகிரிநாதரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை ஆதீனத்துக்கு ரூ.1 கோடி அளித்துள்ளதாகவும் மேலும் ரூ.4 கோடி அளிப்பேன் என்றும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். ஆதீனம் நியமனத்தில் பல கோடி கைமாறியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுரை ஆதீனத்துக்கு ரூ.1300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. அவற்றுக்கு வாடகை வசூலிப்பது, மடத்தின் கணக்குகளை பராமரிப்பதில் பல கோடிக்கு குளறுபடி நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்துவதாக தெரிகிறது. அதிகாரிகள் வந்தபோது அருணகிரிநாதர் தூங்கிக் கொண்டிருந்தார். அவரை அதிகாரிகள் எழுப்பி விசாரித்து வருகின்றனர். சித்ரா பவுர்ணமி என்பதால் இன்று திருவண்ணாமலை செல்ல ஆதீனம் திட்டமிட்டிருந்தார். ரெய்டு காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook