அரசு வழங்கிய கறவை மாடுகள் : மர்ம நோயால் சாவு
ஸ்ரீபெரும்புதூர் :ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் கடந்த பிப்ரவரியில் அரசின் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 55 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டன. தற்போது கடந்த மாதம் புஷ்பாசுந்தர் என்பவரது கறவை மாடு திடீரென நோய்வாய்பட்டுள்ளது. உடனே ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள வட்டார கால்நடை மருத்துவமனையில் தகவல் தரப்பட்டது. ஆனால் மருத்துவர்கள் யாரும் வராததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கறவை மாடு இறந்துள்ளது. இதே போல் சாமந்தி திருநாவுக்கரசு மற்றும் கலா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாடுகள் திடீரென மர்ம நோய் தாக்கி இறந்தது. அடுத்தடுத்து 3 மாடுகள் நோய்வாய்பட்டு இறந்ததால் மற்ற பயனாளிகளும் அச்சத்தில் உள்ளனர். எனவே கால்நடை மருத்துவமனைகளில் இருந்து டாக்டர்கள் வந்து பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.