சித்திரை திருவிழாவுக்காக இன்று மதுரை புறப்படுகிறார் கள்ளழகர்
மதுரை :உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா வரும் நாளை மறுநாள் நடக்கிறது. இதற்காக இன்று மாலை அழகர் கோவிலிலிருந்து கள்ளழகர் மதுரை புறப்படுகிறார். மதுரையை அடுத்த அழகர்மலை சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா கடந்த 2ம் தேதி துவங்கியது. மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்குவதற்காக சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு இன்று மாலை மதுரை புறப்படுகிறார். அவருக்கு 5ம் தேதி அதிகாலை மூன்று மாவடியில் எதிர்சேவை அளிக்கப்படுகிறது. காலை 9 மணிக்கு புதூரிலும், மாலை 5 மணிக்கு தல்லாகுளத்திலும் எதிர்சேவை நடக்கிறது. இரவு 12 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்சனமாகி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் 6ம் தேதி அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளத்தில் இருந்து புறப்பாடாகி காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர், லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணைத்தொட வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.