சென்னை :‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு 36,000 வீடுகள் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டசபையில் இன்று, பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து, கூறியதாவது: ‘உங்கள் சொந்த இல்லம்’ திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு போதுமான அளவு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்தேன். கடந்த 24.4.2012ல் பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, ‘காவலர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு சொந்த வீடு கிடைக்க ஆவன செய்ய இந்த அரசு ஒரு திட்டம் தீட்டி செயல்படுத்தும்’ என அறிவித்து இருந்தேன். இதன்படி, உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ், காவல் துறையில் காவலர்கள் முதல் துணைக் கண்காணிப்பாளர்கள் வரையிலான பதவிகளில் உள்ளவர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்போர் முதல் நிலைய அலுவலர் வரையிலான பதவிகளில் உள்ளவர்களுக்கும் சொந்த வீடு கட்டித் தர தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் நடவடிக்கை எடுக்கும். ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் 10 ஏக்கர் நிலமும், காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூர் கிராமத்தில் 100 ஏக்கர் நிலமும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்திற்கென ஒதுக்கீடு செய்து தரப்படும். கட்டுமானப் பணிகளை காவலர் வீட்டு வசதி கழகம் மேற்கொள்ளும்.
காவலர்கள், தலைமைக் காவலர்கள், தீயணைப்போர், முன்னிலை தீயணைப்போர் மற்றும் உதவி நிலைய அலுவலர்கள் ஆகியோருக்கு 650 சதுர அடி கொண்ட வீடுகளும் உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், நிலைய அலுவலர்கள் மற்றும் உதவிக் கோட்ட அலுவலர்கள் ஆகியோருக்கு 850 சதுர அடி கொண்ட வீடுகளும், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் கோட்ட அலுவலர்களுக்கு 1100 சதுர அடி கொண்ட வீடுகளும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தால் லாப நோக்கமின்றி கட்டித் தரப்படும். இந்த வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்டப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 36,000 குடியிருப்புகள் கட்டப்படும். காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பணியாளர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களது இட விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் இந்த ஆண்டு முதல் துவங்கப்பட்டு படிப்படியாக செயல்படுத்தப்படும். இந்த வீடுகளுக்கான விலையை காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் அவரவர் விருப்பத்திற்கேற்ப முழுவதும் ரொக்கமாகவோ அல்லது மாதத் தவணையிலோ செலுத்த வழிவகை செய்யப்படும். இதன் மூலம் காவல் துறையினர் தமக்கென சொந்த வீடு கட்ட இயலவில்லை என்ற குறை நிவர்த்தி செய்யப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook