நாசரேத் :சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட் பிடியில் சிக்கியுள்ள கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனை மீட்க தூதர் கோபால் இன்று காலை ஹெலிகாப்டரில் காட்டுப்பகுதிக்கு சென்றார். மாலை 6 மணிக்குள் கலெக்டர் விடுவிக்கப்படலாம் என்று தெரிகிறது. அவரை வரவேற்க ராய்ப்பூரில் குடும்பத்தினர், உறவினர்கள் காத்திருக்கின்றனர். சட்டீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட கலெக்டர் பால்மேனன் கடந்த 21,ம் தேதி மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டார். தமிழக ஐஏஎஸ் அதிகாரியான அவரை மீட்க மத்திய அரசும், சட்டீஸ்கர் மாநில அரசும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி மாவோயிஸ்ட் தூதர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடந்த திங்கட்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் மாவோயிஸ்ட் களுக்கும் அரசுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக மாவோயிஸ்ட் பிடியில் சிக்கியுள்ள அலெக்ஸ் பால்மேனன் இன்று விடுவிக்கப்படுகிறார். இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷியஸ் கல்லூரி முதல்வர் ஜோயல் சட்டீஸ்கர் சென்றுள்ளார்.
அங்குள்ள நிலவரம் பற்றி போனில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர் கூறியதாவது: கலெக்டர் அலெக்ஸை மீட்க சட்டீஸ்கர் மாநில அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இன்று அதிகாலை 3 மணிக்கு மாநில முதல்வரிடம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, அலெக்ஸை மீட்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி கோபாலை மட்டும் அனுப்பி வைக்கவேண்டும். வேறு யாரையும் அழைத்துவரக்கூடாது. பால்மேனனை இன்று மாலை 6 மணிக்குள் 4 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் விடுவிப்போம் என்று தெரிவித்தனர். சுக்மா மாவட்டம், மாஞ்சிப்பாடா, கச்சைலாடா, மாத்டோரி ஆகிய 4 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து விடுவிக்கப்படலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், மாவோயிஸ்ட் வேண்டுகோள்படி கோபால் மட்டும் இன்று காலை 8.45 மணி அளவில் ராய்ப்பூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் டட்மெட்லா காட்டுப்பகுதிக்கு புறப்பட்டு சென்றார். கலெக்டர் அலெக்ஸ் பால்மேனை வரவேற்க அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ராய்ப்பூரில் முகாமிட்டு உள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook