திருவள்ளூர் :மணல் திருட்டை தடுத்த தேமுதிக எம்எல்ஏ கார் எரிக்கப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருத்தணி தொகுதி எம்எல்ஏ அருண் சுப்பிரமணியம் (51), திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளராகவும் உள்ளார். திருவள்ளூர் மணவாளன் நகரில் வசிக்கிறார். வரதராஜபுரத்தில் அருண் சுப்பிரமணியனுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதை பார்க்க நேற்று மாலை 6 மணியளவில் காரில் புறப்பட்டார். இவரது நிலத்துக்கு பக்கத்தில் உள்ள காலி இடத்தில் மாட்டு வண்டியில் ஒரு கும்பல் மணல் திருடிக் கொண்டிருந்தது. இதை பார்த்த அருண் சுப்பிரமணியம், மணல் திருடியவர்களை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் காரை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவருடன் எம்எல்ஏ வீட்டுக்கு வந்துவிட்டார். இந்நிலையில் அவரது கார் மர்மமான முறையில் எரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் அருண் சுப்பிரமணியன் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் வரதராஜபுரத்தில் எனக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று மாலை 6 மணியளவில் தோட்டத்துக்கு டிரைவருடன் சென்றேன். அப்போது அருகில் உள்ள நிலப்பகுதியில் மாட்டு வண்டியில் சிலர் மணல் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களை விரட்டினேன். அப்போது அவர்கள் செல்போன் மூலம் யாருக்கோ தகவல் கொடுத்தனர். உடனடியாக 20,க்கும் அதிகமானோர் பைக்கில் வந்தனர். இதனால் நானும் டிரைவரும் காரை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விட்டோம். இரவு 9 மணியளவில் எனது கார் எரிவதாக தகவல் வந்தது. உடனடியாக அந்த இடத்துக்கு பதற்றத்துடன் சென்று பார்த்தேன். கார் முழுவதும் எரிந்து கிடந்தது. மணல் திருட்டை தடுத்ததால் மர்ம நபர்கள் எனது காருக்கு தீவைத்து வைத்துவிட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். இது குறித்து திருவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணல் திருட்டை தடுத்ததால் ஆத்திரத்தில் மர்ம நபர்கள் காருக்கு தீவைத்தார்களா அல்லது வேறு காரணமாக என்று விசாரிக்கின்றனர்..
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook