ஜார்கண்ட் மாநிலங்களவை தேர்தல் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
புதுடெல்லி: ஜார்கண்ட் மாநிலத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலை தள்ளி வைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜார்கண்ட் உள்ளிட்ட 14 மாநிலங்களில் கடந்த 30-ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடந்தது. ஜார்கண்டில் காலியாக இருந்த 2 இடங்களுக்கு காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர்களுடன் சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேரும் போட்டியிட்டனர். இதனால் அந்த மாநிலத்தில் குதிரை பேரம் அதிக அளவில் நடைபெற்றது. தேர்தலுக்கு முதல்நாள் சுயேச்சை வேட்பாளர் அகர்வாலின் உறவினர் காரில் இருந்து ரூ.2.25 கோடி கைப்பற்றப்பட்டது. இதை தொடர்ந்து அந்த மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
தேர்தல் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை தொடங்கினர். காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. 2 சுயேச்சை எம்எல்ஏ வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில் மே 3-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் இந்த தேர்தலை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் எம்பி சல்கான் மர்மு உள்ளிட்டோர் சேர்ந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. குற்றவாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையில் தேர்தல் நடத்தினால் அது நேர்மையான நியாயமான தேர்தலாக இருக்காது என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.