சென்னை: சென்னையில் 2 நர்சிங் மாணவிகள், அர்ச்சகர் உள்பட 5 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக் கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. காய்ச்சலை தடுக்க, தமிழக சுகாதாரத் துறை செயலர் தலைமையில் அதிகாரிகள் இன்று கோட்டையில் அவசர ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் ஓரிருவர் பாதிக்கப்பட்டனர். காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க உடனடியாக, ரயில் மற்றும் விமான நிலையங்களில் நோய் கண்காணிப்பு மையம், அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு பயிற்சி, பன்றிக் காய்ச்சல் குறித்து சளி பரிசோதனை செய்ய அங்கீகரிக்கப்பட்ட லேப்கள் அறிவிக்கப்பட்டன.
வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிர பரிசோதனைக்கு பிறகே டாக்டர்கள் குழுவினர் வெளியில் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் பகுதியில் வசிப்பவர்களுக்கு டாமி புளூ என்ற ஓசால்டாமாவீர் மாத்திரை வினியோகிக்கப்பட்டு வருகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், பன்றிக் காய்ச்சல் தடுப்பூசியை பொதுமக்களுக்கு போடும் திட்டம் இல்லை. மாத்திரை மட்டும்தான் கொடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தனியாரிடம் இருந்து ரூ.55 லட்சத்தில் வாங்கப்படும் தடுப்பூசி மருந்துகள், சுகாதார துறையில் பணிபுரிபவர்கள், நர்ஸ்களுக்குதான் போடப்பட உள்ளது. இதனால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
இந்நிலையில், திருவொற்றியூர் வடக்கு பிரகாரம் தெருவை சேர்ந்த ரங்கநாதன் (40) என்பவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர், மணலி சின்ன சேக்காடில் உள்ள கோயிலில் அர்ச்சகராக இருக்கிறார். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ரங்கநாதனின் சளி மாதிரி, கிண்டியில் உள்ள கிங்ஸ் பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியானதை அடுத்து உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த மருத்துவமனையில் இவருடன் சேர்த்து 5 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரங்கநாதனின் மனைவி மற்றும் பிள்ளைகளின் சளி மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் மற்றும் அவர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் மாத்திரை வினியோகிக்கப்பட்டது. தவிர, அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்று கண்காணிக்கும் பணியில் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர். சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில், 2 நர்சிங் மாணவிகளுக்கும் வியாசர்பாடியில் 2 பேருக்கும் பன்றிக் காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. மாணவிகளுக்கு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் மற்ற 2 பேருக்கு வீட்டிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சென்னையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் மேலும் பரவுவதை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று காலை நடந்தது. சுகாதார துறை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொது சுகாதாரத் துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுப்பது, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக தனி வார்டுகளை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். தமிழகம் முழுவதும், இதுவரை 115 பேர், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கல்லூரி மாணவி உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook