மகாராஷ்டிர கவர்னர் மீது சரத்பவார் கடும் தாக்கு
அகமத் நகர்: மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு சரியாக நிவாரணம் வழங்கவில்லை என மாநில கவர்னர் கே.சங்கர நாராயணனை மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் வழங்கும் அதிகாரம் மாநில கவர்னரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கடந்த மாதம் நிவாரண உதவிகளை கவர்னர் சங்கர நாராயணன் அறிவித்தார். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, வறட்சி நிலவரங்களை அறிந்து கொள்ளாமல் தன்னிச்சையாக கவர்னர் நிவாரண உதவிகளை அறிவித்திருப்பதாக மத்திய அமைச்சர் சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அகமத் நகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மேற்கு மகாராஷ்டிரா கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு சரியாக நிவாரணம் வழங்கப்படவில்லை. மேற்கு மகாராஷ்டிரா, மராத்வாடா, வடக்கு மகாராஷ்டிர பிராந்தியங்ளை சேர்ந்த 7500 கிராமங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் உள்ளது. மொத்தம் 9 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. புறக்கணிக்கப்பட்ட மேற்கு மகாராஷ்டிராவுக்கு உடனடியாக கவர்னர் நிவாரணம் வழங்க வேண்டும். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அண்மையில் வறட்சி மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்தார். நிவாரண உதவிகள் வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதன் பின்னராவது இந்த விஷயத்தில் கவர்னர் அக்கறை செலுத்தி முறையான நிவாரண உதவியை அறிவிக்க வேண்டும்.