இந்தியாவின் ‘அக்னி’யை தொடர்ந்து பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை
இஸ்லாமாபாத் : இந்தியாவின் ‘அக்னி’யை தொடர்ந்து பாகிஸ்தானும் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. பாகிஸ்தானின் ஷாஹின் ஏவுகணை வரிசையில் ஷாஹின் , 1ஏ என்ற ஏவுகணையை பாகிஸ்தான் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். ஷாஹின் 1 ஏவுகணையின் மேம்பட்ட வடிவமான இந்த ஏவுகணை, இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கும் இந்த ஏவுகணை எவ்வளவு தூரத்துக்கு செல்லும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இந்த ஏவுகணை 2500 முதல் 3000 கிமீ வரை சென்று தாக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது. இந்த சோதனை தொடர்பான ‘அலர்ட்’டுக்காக இந்தியாவுக்கு ஏற்கனவே பாகிஸ்தான் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதால் அந்நாட்டு விஞ்ஞானிகளுக்கு அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அணு ஆயுதங்களை ஏந்தி சென்று 5000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் அக்னி , 5 ஏவுகணையை இந்தியா கடந்த 18ம் தேதி வெற்றிகரமாக சோதித்தது குறிப்பிடத்தக்கது.