சென்னை : போலி தொண்டு நிறுவனம் மூலம் மோசடிகளை போலி ஐபிஎஸ் பெண் அதிகாரி அரங்கேற்றியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. சென்னையில் போலி ஐபிஎஸ் அதிகாரி விஜயபானுவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரை பற்றி விசாரணை நடத்தியதில் பல லட்சங்களை மோசடி செய்து பறித்துள்ளது தெரிந்தது. இதையடுத்து விஜயபானுவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விஜயபானுவை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் இரவு முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி ஐபிஎஸ் அதிகாரி விஜயபானு அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நான் ஆங்கிலம் நன்றாக பேசுவதால் எல்லோரையும் மயக்கி விடுவேன். சிறை வார்டன் விதேச்சனாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவருடைய வீட்டிலேயே தங்கி விட்டேன். அவர் போலீஸ் என்பதால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. பாதுகாப்பாக இருந்தேன். தைரியமாக மோசடி வேலைகளில் ஈடுபட்டேன். தொண்டு நிறுவனம் நடத்தி வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம், நகைகளை வாங்கிக்கொண்டு ஏமாற்றினேன். நான் குறுக்குவழியில் முன்னேற நினைப்பவர்களிடம் தான் என்னுடைய மோசடி வேலையை காட்டியுள்ளேன். மோசடி செய்த நகைகளை நகைக்கடையில் அடகு வைத்துள்ளேன்.
இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார். போலீசார், விஜயபானு அடகு வைத்திருந்த 100 சவரன் நகைகளை மீட்டனர். விஜயபானு மீது மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு 4 புகார்கள் வந்துள்ளது. இதில் மாதவரத்தைச் சேர்ந்த சரளா என்பவர் மோசடி புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது புதிய வழக்கு ஒன்று நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போல¢ வேலூரில் விஜயபானு மீது மோசடி வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த 2 வழக்கிலும் அவரை போலீசார் கைது செய்யும் முனைப்பில் உள்ளனர். விஜயபானு 3 நாட்கள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் அவரை மாலையில் போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க உள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook