மருமகனை மீட்க தமிழக அரசு உதவ வேண்டும் : கலெக்டரின் மாமனார் உருக்கம்
சென்னை :சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸின் மாமனார் வேணுகோபால் (60). எல்ஐசியில் தலைமை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஆனந்தி. அண்ணா நகர் நொளம்பூர் 4வது மெயின் ரோடு 7 வது குறுக்கு தெருவில் வசிக்கிறார். மருமகன் கடத்தப்பட்டது குறித்து அவர் கூறுகையில், எனது மகள் நேற்று போன் செய்து மருமகன் கடத்தப்பட்டதை தெரிவித்தார். நக்சல்கள் 2 பாதுகாவலர்களை சுட்டு கொன்று விட்டு பைக்கில் வைத்து அடர்ந்த காட்டு பகுதிக்கு மருமகனை கடத்தி சென்றுள்ளனர். நேற்று இரவு மீண்டும் மகள் பேசினாள். நாங்கள் விரைவில் சட்டீஸ்கர் புறப்பட தயாராக உள்ளோம். எனது மருமகனை மீட்க மத்திய, மாநில அரசும் தமிழக அரசும் உதவ வேண்டும்ÕÕ என்றார்.
அலெக்ஸின் தந்தை வரதாஸ் சென்னை முகப்பேர் தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சை பெற வந்துள்ளார். இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நாங்கள் திருநெல்வேலி பாளையங்கோட்டை மகாராஜா நகர், ராம் நகரில் வசிக்கிறோம். எனது மகன் அலெக்ஸ் நேற்று மாலை 4.45 மணிக்கு போன் செய்தான். மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களை கேட்டான். பின்னர் சிறிது நேரத்தில் எனது மருமகள் புஷ்பா பாக்கியம் போன் செய்தார். அப்போது அலெக்ஸ் கடத்தப்பட்டதை தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்தேன். குடும்பத்தின் மீது பாசம் உள்ளவன் என் மகன். கல்லூரியில் படிக்கும் போதே முற்போக்கு சிந்தனை உடையவன். பொதுமக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வமாக இருப்பான். அதற்காக ஐஏஎஸ் படித்தான். என் மகனை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வரதாஸ் கூறினார்.