என்எல்சி தொழிலாளர்கள் 2வது நாளாக ஸ்டிரைக் : மறியல் செய்ய முடிவு
நெய்வேலி :என்எல்சியில் பணி புரிந்து வரும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள், பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில், ஏஐடியுசி சார்பிலான ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற ஸ்டிரைக்கை நேற்று துவக்கியது. இதற்கு தொமுச, சிஐடியு போன்ற தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தால் உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை என்று என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
போராட்டம் குறித்து ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சேகர் கூறியதாவது: 90 சதவீத தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் நீடிக்கும் பட்சத்தில் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த போராட்டம் நாளை முதல் மறியல், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி என பல வடிவங்களில் உருவெடுக்கும். திருச்சியில் இன்று நடைபெற உள்ள ஏஐடியுசி மாநில கூட்ட முடிவின்படி அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும். பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கைகளில் நாங்கள் எவ்வித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். எங்களது இந்த போராட்டத்துக்கு இதர தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.