சேலம் :தமிழகம் முழுவதும் நாளை தொடங்கி 40 நாட்களுக்கு சமூக, பொருளாதார மற்றும் ஜாதி கணக்கெடுப்பு பணி நடக்கிறது. நாடு முழுவதும் சமூக, பொருளாதார மற்றும் ஜாதி கணக்கெடுப்பை நடத்திட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி அனைத்து மாநிலங்களிலும் இந்த கணக்கெடுப்பை மாநில அரசுகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் சமூக, பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு பணியை நாளை (23ம் தேதி) துவங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு, கணக்கெடுப்பை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற அலுவலர்கள் நாளை முதல், அனைத்து பகுதிகளிலும் வீடுகளுக்கு சென்று மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் சமூக, பொருளாதார நிலை குறித்து விரிவாக விவரங்களை பதிவு செய்து கொள்கின்றனர்.
கணக்கெடுப்பின் நோக்கம்: அனைத்து தரப்பு மக்களின் பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது, எம்மாதிரியான வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர், வேலை, வருமானம் குறித்து அறிந்து கொள்ளுதல், வெளி மாநிலத்தவர்கள் எத்தனை பேர் தமிழகத்தில் உள்ளனர் என்பதை அறிவது, மாற்றுத்திறனாளி மற்றும் வீடு இல்லாத நபர்களின் எண்ணிக்கையை அறிதல், எதிர்கால வளர்ச்சி திட்டங்களை தீட்ட இந்த புள்ளி விவரங்களை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்காக இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கணக்கெடுப்பாளர், கணினி ஆபரேட்டர் என இருவர் செல்வர். கணக்கெடுப்பாளர் விவரங்களை கேட்டவுடன், கையில் வைத்திருக்கும் கணினியில் அந்த தகவல்களை ஆபரேட்டர் பதிவு செய்து கொள்வார். இதன் மூலம் ஒவ்வொரு நபரின் குடும்ப நிலை, சமூக, பொருளாதார நிலை பற்றி முழுமையாக அரசு அறிந்துக் கொள்ள முடியும். வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் நபர்களையும் அடையாளம் காண முடியும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook