தென்கொரியா தகவல் : வடகொரியா ராக்கெட் சோதனை தோல்வி
பியாங்யாங் : சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இன்று வடகொரியா ராக்கெட் ஏவி நடத்திய சோதனை தோல்வியில் முடிந்தது என்று தென்கொரியா கூறியுள்ளது. வடகொரியா தலைவர் கிம் சுங்கின் நூறாவது பிறந்த தினத்தையொட்டி, சாட்டிலைட் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்தது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சாட்டிலைட் ஏவுவதாக கூறி, ராணுவத்துக்கு தேவையான ஏவுகணை சோதனை நடத்துவதாக குற்றம் சாட்டின. இது ஐநா தீர்மானத்துக்கு எதிரானது என்று எச்சரித்தன. ஆனால், அமைதி பணிகளுக்காகவே இந்த சாட்டிலைட் ஏவப்படுவதாக வடகொரியா கூறியது. இந்நிலையில், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா இன்று ராக்கெட் சோதனை நடத்தியதாக தென்கொரியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கிம் மின்சியோக் கூறுகையில், ‘இன்று காலை 7.39 மணியளவில் வடகொரியாவில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது. ஆனால் சில நிமிடங்களிலேயே அது துண்டு துண்டாக உடைந்து கடலில் விழுந்து விட்டது என்றார். ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் நவோகி தனாகா, வடகொரிய சோதனையை உறுதி செய்தார். ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் கிடோ வெஸ்டர்வெல்லி, வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வடகொரியா சர்வதேச கட்டுபாடுகளை மீறி விட்டதாக கூறியுள்ளார். இந்த விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் இதுவரை வடகொரியா எதுவும் கூறவில்லை.