சென்னை: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை நடக்கிறது. நாளை மறுநாள் அறுபத்து மூவர் உற்வசம் நடக்கிறது. இதையொட்டி, மயிலாப்பூரில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கபாலீசுவரர் - கற்பகாம்பாள் கோயிலின் பங்குனி திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமியும் அம்பாளும் தினமும் காலை, மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை நடக்கிறது. காலை 7 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு நான்கு மாட வீதிகளிலும் உலா வருகிறது.
இதையடுத்து நாளை மறுநாள் (4-ம் தேதி) அறுபத்து மூவர் உற்சவம் நடக்கிறது. கபாலீசுவரர், கற்பகாம்பாளுடன் முருகர், விநாயகர் மற்றும் 63 நாயன்மார்கள் சப்பரங்களில் மாட வீதிகளில் உலா வருவர். இந்த விழாவை காண சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவர். தேரோட்டம் மற்றும் அறுபத்து மூவர் விழாவையொட்டி மயிலாப்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரமும் தீயணைப்பு வண்டிகள் உஷார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 2 நாட்களுக்கு அந்த பகுதியில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரையும், நாளை மறுநாள் மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் போக்குவரத்து மாற்றப்படுகிறது. திருவிழா நாட்களில் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோயிலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாராயணன் தெரு வரை, சித்திரகுளம் கிழக்கில் இருந்து சித்திரகுளம் வடக்கு தெரு வரை, சுந்தரேஸ்வரர் தெருவில் இருந்து சன்னதி தெரு வரை, ஆர்.கே. மடம் சாலையில் இருந்து தெற்கு மாட வீதி வரை, புனிதமேரி சாலையில் இருந்து ஆர்.கே. மடம் சாலை சந்திப்பு வரை, டாக்டர் ரங்கா சாலையில் இருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை வரை, லஸ் சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் சாலை வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக அடையார் செல்லும் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவச்சலம் ரோடு, டாக்டர் ரங்கா ரோடு, சி.பி ராமசாமி ரோடு, புனித மேரி சாலை, ஆர்.கே.மடம் ரோடு வழியாக மந்தைவெளியை அடையலாம். அடையாரில் இருந்து ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, மந்தைவெளி, வி.கே.அய்யர் ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன் ரோடு, டாக்டர் ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, லஸ் சர்ச் ரோடு, கற்பகாம்பாள் நகர், விவேகானந்தா கல்லூரி, பி.எஸ். சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
மயிலாப்பூர் கோயில் குளம் அருகில் உள்ள மாநகர பஸ் நிறுத்தம், லஸ் சர்ச் சாலையில் அமிர்தாஞ்சன் கம்பெனி அருகில் மாற்றப்பட்டுள்ளது. சன்னதி தெரு, கிழக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி, ஆர்.கே.மடம் சாலை மற்றும் வடக்கு மாட வீதி ஆகிய இடங்களில் 2 நாட்களும் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை. அதை மீறி வாகனங்களை நிறுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
வாகனங்களை எங்கு நிறுத்தலாம்?
திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.மடம் சாலையில் இருந்து வரும் வாகனங்களை பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் உட்புறம் உள்ள விளையாட்டு மைதானத்தில் நிறுத்தலாம். கிழக்குபுறம் இருந்து மயிலாப்பூர்¢ குளம் நோக்கி வரும் வாகனங்களை லஸ் சர்ச் ரோடு, காமதேனு கல்யாண மண்டபம் (தியேட்டர்) எதிரில் நிறுத்தலாம். * மேற்கில் இருந்து வரும் வாகனங்கள் சாய்பாபா கோயில் அருகில், வெங்கடேச அக்ரஹாரம் மயிலை ரயில் நிலைய பாலத்தின் கீழ் நிறுத்தலாம்.