சென்னை :கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்தால் தமிழகத்தில் இருள் நீங்கி வெளிச்சம் கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் 80வது பிறந்த நாள் முத்து விழா, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமை வகித்தார். குமரி அனந்தனை வாழ்த்தி மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியதாவது: நதிநீர் இணைப்பு உள்பட பல கோரிக்கைகளுக்காக நடைபயணம் மேற்கொண்டவர் குமரி அனந்தன். தேச விடுதலைக்கு பாடுபட்ட வ.உ.சி, பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்றவர்களுக்கு நினைவு மண்டபம் எழுப்ப போராடியுள்ளார். 45 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாவிட்டாலும், மாநிலத்தில் கட்சி உயிரோட்டமாக இருப்பதற்கு குமரி அனந்தன் போன்ற தன்னலமற்ற தியாக சீலர்களின் உழைப்புதான் காரணம்.
முல்லை பெரியாறு, இலங்கை தமிழர், தமிழக மீனவர் பிரச்னை என எந்த பிரச்னையாக இருந்தாலும், தமிழக நலன் சார்ந்தே காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா.வில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் பிரதமரை சந்தித்து வலியுறுத்தினோம். தமிழக மக்களின் உணர்வுகளை உறுதியோடு வெளிப்படுத் தினோம். அவரும் நம்பிக்கையோடு பதில் அளித்தார்.கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம், கடந்த சில மாதங்களாக நடந்து வரும் போராட்டத்தால் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழகம் இருளில் மூழ்கி இருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்தால், தமிழகத்தில் இருள் நீங்கி வெளிச்சம் உண்டாகும். இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.
விழாவில், மத்திய அமைச்சர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, முன்னாள் எம்எல்ஏ யசோதா, கவிஞர் வைரமுத்து, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, புதுவை காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட தலைவர் கத்திப்பாரா ஜனார்த்தனன், வடசென்னை மிட்டாய் வியாபாரிகள் சங்க தலைவர் தங்கபெருமாள், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபாலன் மற்றும் கரிக்கோல்ராஜ், பெரம்பூர் நிசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாராட்டுக்கு நன்றி தெரிவித்து குமரி அனந்தன் பேசினார். முடிவில் காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் வசந்தகுமார் நன்றி கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook