காஞ்சி கலெக்டர் ஆபீஸ் முன்பு தொழிலாளர்கள் திடீர் மறியல்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் படாளம் கூட்டு ரோட்டில் சப்தகிரி புட் புராடக்ட் காளான் கம்பெனி உள்ளது. இங்கு 150க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். சண்டிகரில் உள்ள இந்த கம்பெனியின் தலைமை அலுவலகம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் இங்குள்ள கம்பெனி, கடந்த ஆண்டு பூட்டப்பட்டது. இதன்பிறகு, ஊழியர்களுக்கு பாதி சம்பளம் வழங்கப்பட்டது. முழு சம்பளம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கடந்த 5 நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கம்பெனி உள்ளேயே சமைத்து சாப்பிட்டனர்.
இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், கம்பெனி நிர்வாகம் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் முழு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் பேசியபடி சம்பளம் வழங்கவில்லை. இந்நிலையில், தொழிலாளர்கள் இன்று காலை 11 மணிக்கு திரண்டனர். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. காஞ்சிபுரம் டிஎஸ்பி சந்திரசேகரன் சென்று தொழிலாளர்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.