புதிய அமைச்சர் பொறுப்பேற்றவுடன் ரயில் பயணிகள் கட்டணம் குறைப்பு
புதுடெல்லி : ரயில்வே அமைச்சராக திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த முகுல்ராய் பொறுப்பேற்றவுடன் ரயில் பயணிகள் கட்டணத்தில் சிறிதளவு மாற்றம் இருக்கும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதி 201213ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை கடந்த 14ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் கட்டணம் சிறிதளவு உயர்த்தப்பட்டது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அமைச்சர் தினேஷ் திரிவேதியை உடனடியாக பதவி நீக்க பிரதமருக்கு கடிதம் எழுதினார். அவரது கோரிக்கையை பிரதமர் உடனடியாக ஏற்கவில்லை. தினேஷ் திரிவேதியும் உடனடியாக பதவி விலக மறுப்பு தெரிவித்தார். மம்தா கேட்டு கொண்டால் மட்டுமே ராஜினாமா செய்வேன் என்றார்.
இதனால் கூட்டணி யில் இருந்து மம்தா விலகுவார் என டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தினேஷ் திரிவேதி அறிவித்தார். இதை தொடர்ந்து தற்போது ரயில்வே இணை அமைச்சராக இருக்கும் முகுல்ராய், ரயில்வே அமைச்சராகிறார். இன்று மதியம் டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மம்தா பானர்ஜி கலந்து கொள்கிறார். இதில் முகுல்ராயை ரயில்வே அமைச்சராக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
முகுல்ராயை ரயில்வே அமைச்சராக்க விருப்பம் இல்லை என்றாலும் கூட்டணி தர்மத்துக்காக வேறு வழியின்றி பிரதமர் ஒப்புக் கொண்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. முகுல்ராய் பொறுப்பேற்றவுடன் ரயில் பயணிகள் கட்டணத்தில் சிறிதளவு மாற்றம் இருக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில் ரயில் கட்டணத்தை குறைக்க ரயில்வே தொழிலாளர்கள் யூனியன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.