சென்னை : லாட்டரி அதிபரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.7.7 கோடியை நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்களைப் பிடித்தால் மேலும் பலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. போலி லாட்டரி விற்பனையை தடுக்க, தமிழகம் முழுவதும் கடந்த வாரம் போலீசார் சோதனை நடத்தினர். அதில் சிறு வியாபாரிகளே கைது செய்யப்பட்டு வந்தனர். இதனால் முக்கிய ஏஜென்ட்டுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பெரும்பாலும் ஆன்லைன் மூலம் லாட்டரி வியாபாரம் நடந்து வந்தது தெரிந்தது. இதற்கிடையே ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் நாகராஜன் என்பவரது வீட்டில் லாட்டரி சீட்டுகள் பதுக்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன், துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் நாசர் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார், அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.7.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக நாகராஜன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில், அவருடன் பங்குதாரராக அண்ணாநகரை சேர்ந்த மூர்த்தியும் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அவரது வீட்டில் சோதனை நடத்தி, ரூ.50 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் மூர்த்தி தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இருவர் வீட்டில் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.7.7 கோடியை ஆலந்தூர் நீதிமன்றத்தில் போலீசார் நேற்று மாலையில் ஒப்படைத்தனர். பின் அந்தப் பணம், அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதிக அளவில் பணம் கைப்பற்றப்பட்டதால், இது குறித்து வருமான வரித்துறைக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் நேற்று மாலை முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்தப் பணத்துக்கு அவர்கள் முறையான வருமான வரி கட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் சிறையில் இருக்கும் நாகராஜனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். மூர்த்தியுடன் ரகு (எ) ரகுநாதன் என்பவருக்கும் போலி லாட்டரி மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றில் அலுவலக உதவியாளராக பணியில் இருந்த ரகுவுக்கு, இப்போது பல கோடி சொத்து இருப்பது தெரியவந்துள்ளது. போலி லாட்டரி மூலமே அவர் சொத்து குவித்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், மூர்த்தி, ரகுவை பிடிக்க மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் நெல்லையில் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், போலீசார் நெல்லைக்கு விரைந்துள்ளனர். அவர்கள் பிடிபட்டால் மேலும் பலர் சிக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook