சென்னை : நீதி மற்றும் சுயமரியாதையை இலங்கை தமிழர்கள் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் இன்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை மீதான தீர்மானம் குறித்து தாங்கள் எழுதிய கடிதம், கடந்த 9ம் தேதி கிடைத்தது. இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு, நல்வாழ்வுக்கு இந்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணுமாறு இலங்கை அரசை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இலங்கை தமிழர்களுக்கு மறுகுடியமர்வு, புனர்வாழ்வு, கட்டமைப்பு வசதிகள் உருவாக்கி தருவதில் இந்தியா முன்னின்று செயலாற்றுகிறது. அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழர்கள் இயல்பு வாழ்க்கை நடத்திட நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தி வருகிறோம். இதற்காக நிதி உதவி அளித்து வருகிறோம். வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி, வேளாண்மை, மற்றும் உள் கட்டமைப்பு வசதிகளுக்கு உதவிகளை செய்து வருகிறோம். தமிழர்கள் பகுதியில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பி வருகிறது. அங்கு, உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிக்குமாறு மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி வருகிறோம். இதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும். ஐநா சபையில் கொண்டு வரப்படும் இலங்கை மீதான தீர்மானத்தில் அனைத்துக்கட்சிகள் உதவியுடன் ஒரு முடிவுக்கு வர மத்திய அரசு முயன்று வருகிறது. சமத்துவம், நீதி மற்றும் சுயமரியாதையை இலங்கை தமிழர்கள் பெற தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook