கருணாநிதியின் பாதுகாப்புக்கு உள்ள 3 போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் அதிரடி ரெய்டு
சென்னை : முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் பாதுகாப்புக்கு உள்ள டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று காலை திடீரென சோதனை நடத்தினர். தொடர்ந்து சோதனை நடந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் பாதுகாப்புக்கு டி.எஸ்.பி. பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் வினோதகன், கணேசன் ஆகிய 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேருமே காவலர்களாக பணியாற்றி, இப்போது பதவி உயர்வு பெற்றவர்கள்.இவர்கள் 1998ம் ஆண்டு முகப்பேர் ஏரி திட்டத்தில் தலா ஒரு கிரவுண்ட் வீதம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டில் இடம் வாங்கினர். அந்த இடத்தை உடனடியாக கவுரி மற்றும் அவரது மகள் பத்மாவுக்கு 3 பேரும் விற்பனை செய்துள்ளனர். முகப்பேர் ஏரி திட்டத்தில் அவர்களுக்கு அடுத்தடுத்த இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் கவுரி மற்றும் பத்மா ஆகியோர் 3 பேரிடமும் நிலத்தை வாங்கி உள்ளனர். அதில் கிடைத்த பணத்தை உடனடியாக வீட்டு வசதி வாரியத்துக்கு 3 பேரும் செலுத்தி உள்ளனர். எனினும், இது அரசு விதிமுறையை மீறியதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் டிஐஜி வெங்கட்ராமன், எஸ்பி துரைக்குமார் ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பாண்டியன் வசிக்கும் மயிலாப்பூர் போலீஸ் குடியிருப்பு, கவுரி, பத்மா வீடுகள் மற்றும் கே.கே.நகர், நெசப்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.