சென்னை : வழக்கு விசாரணையின் போது இன்ஸ்பெக்டர் ஆஜராகாத விவகாரத்தில், கோவை போலீஸ் கமிஷனர் மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்ததை ஐகோர்ட் ஏற்றுக் கொண்டது. தூத்துக்குடியை சேர்ந்த ஜான்சன் என்பவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது: கோவையில் எனது மகன் கிஷோர்குமார், மெக்கானிக் ஷெட்டில் பணியாற்றினான். கடந்த ஆண்டு அவனது செல்போன் காணாமல் போனது. கடந்த மாதம் 5ம் தேதி கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர், தூத்துக்குடி வந்து என்னை சந்தித்து எனது மகன் செல்போன் ஒரு குற்றம் நடந்த இடத்தில் இருந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று என்னிடம் கூறிவிட்டு சென்றார். அதன்பின், கோவை சென்று என் மகனை தேடினேன். அவன் எங்குள்ளான் என்று தெரியவில்லை. எனது மகனை காணவில்லை. அவனை கண்டுபிடித்து ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் மோகன்ராம், அக்பர் அலி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் தம்பிதுரை ஆஜராகி, ‘‘இன்ஸ்பெக்டருக்கு தகவல் அனுப்பியும், அவர் நீதிமன்றத்துக்கு வர மறுக்கிறார்ÕÕ என்றார். இதை கேட்ட நீதிபதிகள், ‘‘நீதிமன்றம் பல முறை இன்ஸ்பெக்டருக்கு நோட்டீஸ் கொடுத்தும், அரசு வக்கீல் தகவல் அனுப்பியும் நீதிமன்றத்துக்கு இன்ஸ்பெக்டர் வரவில்லை, எனவே, பிப்ரவரி 22ம் தேதி போலீஸ் இன்ஸ்பெக்டரை கோவை போலீஸ் கமிஷனர் கைது செய்து, நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த ஜாமீனில் வரமுடியாத பிடிவாரன்டை பிறப்பிக்கிறோம்ÕÕ என்று உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த 22ம் தேதி மீண்டும் ஐகோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கோவை உதவி கமிஷனர் நேரில் ஆஜராகி, இன்ஸ்பெக்டரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினார். இதைப் பார்த்த நீதிபதிகள், கோவை போலீஸ் கமிஷனர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அவர் ஏன் இன்ஸ்பெக்டரை கைது செய்யவில்லை என்றும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கோவை போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி நேரில் ஆஜராகி, மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை இத்துடன் முடித்து கொள்வதாக உத்தரவிட்டனர். காணாமல் போன கிஷோர்குமாரை ராஜபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எனவே, கிஷோர்குமார் ஜாமீன் மனு தாக்கல் செய்து உரிய உத்தரவு பெறலாம் என்று உத்தரவிட்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook