நியூயார்க்: தொழிலதிபர்களின் ஆதிக்கத்தை ஒழித்து பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று அமெரிக்காவில் வால் ஸ்டீரிட் முற்றுகை நடத்தும் போராட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் நடந்து வருகிறது. இந்த போராட்டம் இங்கிலாந்து உள்பட பல நாடுகளுக்கும் பரவியது. இந்நிலையில், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் தனியார் வங்கிகளில் வைத்திருந்த வங்கி கணக்குகளை முடித்துக் கொண்டு, லாப நோக்கின்றி செயல் படும் உள்ளூர் கூட்டுறவு வங்கிகளில் புது கணக்கு தொடங்கி உள்ளனர். இதனால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'தேசிய வங்கி கணக்கு மாற்ற தினம்' என்ற பெயரில் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் சியாட்டல், வாஷிங்டன் உள்பட பல நகரங்களில் வங்கி கணக்கை 'குளோஸ்' செய்து விட்டனர். இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், 'பெரிய பெரிய தனியார் வங்கிகளில் குவிந்து கிடக்கும் பணத்தை உள்ளூர் கூட்டுறவு வங்கிகளுக்கு மாற்றுவதே நோக்கம். லாப நோக்கின்றி செயல்படும் கூட்டுறவு வங்கிகளால் உள்ளூர் மக்கள் பெரும் பயனடைவார்கள்' என்று தெரிவித்தனர். பேங்க் ஆப் அமெரிக்கா, வெல்ஸ் பார்கோ உள்பட பல பெரிய தனியார் வங்கிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பரில் இருந்து இதுவரை 6.5 லட்சம் வாடிக்கையாளர்கள் தனியார் வங்கி கணக்கை முடித்து கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்துள்ளனர் என்று தேசிய கூட்டுறவு வங்கி சங்கம்தெரிவித்துள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook